சென்னையை அடுத்த திருவேற்காட்டில் விளையாட்டுத் திடலை அழித்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா?.. கருத்து கேட்பு கூட்டத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி நிர்வாகம் பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. கூவம் நதிக்கரையோரம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் ஊருக்கு நடுவே அமைக்க துடிப்பது ஏன்? கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை வைவிட்டுவிட்டு விளையாட்டு திடலை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கோலடி கிராமத்தில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் மாந்தோப்பு விளையாட்டுத் திடலை சீரழித்து, அதில் 8.48 ஏக்கர் பரப்பளவில் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த திருவேற்காடு நகராட்சி தீர்மானித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருத்துகேட்பு கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு தெரிவித்தும் கூட இதை செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: கட்சி என்றால் கொஞ்சம் கோஷ்டி இருக்கத் தான் செய்யும்! பூதாகரமாகிறதா அன்புமணி பிரச்னை? ராமதாஸ் ஓபன் டாக்!
விளையாட்டுத் திடலுக்கு அருகே 169 ஏக்கர் பரப்பளவில் கோலடி ஏரி அமைந்துள்ளது. திருவேற்காடு நகரத்தின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஏரிக்கு அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் ஏரி மாசுபடுவதுடன், நிலத்தடி நீரின் தரம் பாதிக்கப்படும்.

மேலும் அங்குள்ள பள்ளிகள், மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதற்கான தொகுப்பு சமையல் கூடம், குடியிருப்புகள் ஆகியவற்றுக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். திருவேற்காடு மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கூவம் நதிக்கரையோரம் உள்ள அரசுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம். ஆனால் ஊருக்கு நடுவே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க நகராட்சி துடிப்பது ஏன்?
ஒருபுறம் தொகுதிக்கு ஓர் விளையாட்டு திடல் என்று அறிவித்து அதற்காக கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, மற்றொருபுறம் விளையாட்டுத் திடல்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பது நகைமுரண். எனவே தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கோலடி விளையாட்டுத் திடலில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அங்குள்ள விளையாட்டு திடலை கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பா VS மகன்.. கட்சியும், தொண்டர்களும் யார் பக்கம்? மாஸ் காட்டும் அன்புமணி ராமதாஸ்..!