பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்தார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்த ராமதாஸ், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை மீட்டு, ஆம்புலன்சில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து விரிவான மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை.
இந்நிலையில், பாமகவில் நீண்டகாலமாக நிலவி வரும் உட்கட்சி மோதல் மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது. கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அவரது மகனும் தற்போதைய தலைவருமான அன்புமணிக்கும் இடையே கட்சிக் கட்டுப்பாடு மற்றும் அதிகாரப் பங்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்குத்தான் கட்சி சொந்தம் எனக் கூறி தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக தேர்தலில் ராமதாஸ் அணிக்கு 'சிலிண்டர்' சின்னம்! 30 வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கீடு!

வரும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. மறுபுறம், டாக்டர் ராமதாஸ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தலைமையிலான அ.இ.பு.த.ம.மு.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்.
இந்த உட்கட்சி பிளவு மற்றும் வெவ்வேறு கூட்டணிகள் காரணமாக, பாமகவின் எதிர்காலம் மற்றும் வாக்கு வங்கி குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. ராமதாஸின் உடல்நிலை விரைவில் சீரடைய வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பாமக வேட்பாளர் பட்டியல் 2026: சசிகலா - ராமதாஸ் கூட்டணியில் 5 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!