உதகையில் மூடப்பட்ட எச்.பி.எப் தொழிற்சாலைக்குள் புகுந்து வெள்ளி கலந்த மண்ணை திருடிய தவெக கிளை செயலாளர் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை தேடி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், உதகையில் H.P.F பகுதியில் மத்திய அரசின் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை செயல்ப்பட்டு வந்தது. நிதி நெருக்கடி மற்றும் உற்பத்தி பாதிப்புகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதையடுத்து, தொழிற்சாலை வளாகத்தில் சிலர் அத்துமீறி நுழைந்து மண் மற்றும் கற்களை அகற்றி விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தன.
குறிப்பாக, தொழிற்சாலை வளாகத்தில் உள்ள மண்ணில் தங்கம் மற்றும் சில்வர் நைட்ரேட் கலந்த வெள்ளி துகள்கள் கலந்துள்ளதால் சிலர் அந்த மண்ணை சட்டவிரோதமாக அள்ளிச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
உதகையில் இருந்து கடத்தப்படும் மண் மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து வெள்ளி பிரித்தெடுக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அனாதைப் பிணமாக மாற்ற முயற்சியா? சபரிவர்மன் மரணத்தில் வெடித்த சர்ச்சை..! அப்பாவு சரமாரி கேள்வி..!
புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கும் இடங்களில் இரவு நேரங்களில் உயிரை பணயம் வைத்து இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து அதிரடியாக செயல்பட்டு மூடப்பட்ட இந்த தொழிற்சாலைக்குள் நுழைந்து வெள்ளி கலந்த மண்ணை திருடியவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மர்ம நபர்கள் சிலர் தொழிற்சாலை வளாகத்தில் சுற்றி திரிந்துள்ளனர். இது தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் புதுமந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது உதகை கணபதி நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ், பிரதீப், நிதிஷ்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து புதுமந்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் வெள்ளி துகள்கள் கிடைப்பதாக கூறி சுமார் 3 டன் மண்களை இரவோடு, இரவாக கடத்தியது தெரியவந்தது. 40க்கும் மேற்பட்ட மண் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மூன்று பேரிடமும் நடத்திய தீவிர விசாரணையில் ரவி (எ) சுதாகர், ஹரிஹரன், நந்தகுமார் என மேலும் மூன்று பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் சுரேஷ் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதுவரை வெள்ளி கலந்த மண் திருட்டு வழக்கில் 37 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ் உதகை 2-வது வார்டு தவெக கிளைச் செயலாளர் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.... சிக்கிய தவெக நிர்வாகி சிறையில் அடைப்பு... நீதிமன்ற காவல்..!