சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கு முக்கியமான வழிகாட்டுதல்களை வழங்கி உத்தரவிட்டுள்ளது. விசாரணை அல்லது புலன்விசாரணை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்தும் நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த உத்தரவின் மையக்கருத்து. சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் தாக்கல் செய்த மனுவில், காவல்துறையினர் விசாரணை என்ற போர்வையில் தன்னைத் துன்புறுத்தி வருவதாகக் குற்றம்சாட்டி, தனது பிரதிநிதித்துவத்தை பரிசீலிக்கும்படி கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், நீதிமன்றம் பொதுவாக காவல்துறையின் விசாரணை நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என்றாலும், விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தல் நடைபெறுவது குறித்து புகார்கள் வரும்போது அதைப் புறக்கணிக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.நீதிபதி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, புகாரில் பெயர் குறிப்பிடப்பட்ட நபரையோ அல்லது சம்பவம் தொடர்பான சாட்சியையோ விசாரணைக்கு அழைக்கும்போது, காவல்துறை அதிகாரி எழுத்துப்பூர்வமான சம்மன் அனுப்ப வேண்டும்.

அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். வாய்மொழி அழைப்பு அல்லது தெளிவற்ற அறிவிப்புகள் மூலம் அழைப்பதைத் தவிர்க்க வேண்டும்.விசாரணை நடைபெறும்போது அதன் விவரங்கள் காவல் நிலையத்தின் பொதுப் பதிவேடு அல்லது ஸ்டேஷன் டயரி அல்லது டெய்லி டயரியில் பதிவு செய்யப்பட வேண்டும். இதன் மூலம் விசாரணை நடைமுறைகள் வெளிப்படையாகவும் கண்காணிக்கத்தக்கதாகவும் இருக்கும். மேலும், விசாரணைக்கு அழைக்கப்படும் நபர்களை எந்த வகையிலும் துன்புறுத்தவோ, மிரட்டவோ, அவமானப்படுத்தவோ கூடாது என்று காவல்துறை அதிகாரிகளுக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன் நடத்தப்படும் முதற்கட்ட விசாரணை மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் லலிதா குமாரி வழக்கில் வழங்கிய வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு காவல்துறையின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அல்ல, மாறாக விசாரணை முறையாகவும் சட்டரீதியாகவும் நடைபெற வேண்டும் என்பதையும், அதே நேரத்தில் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதிகள் நியமனம்! 15 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!