தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு திருப்பத்தைச் சந்தித்து வருகிறது. தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் இரண்டு பேர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அக்கட்சி ஏற்கனவே தவெக-விற்குத் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகையச் சூழலில் எழுந்துள்ள இந்த புதிய தகவல் காங்கிரஸில் சலசலப்பை உருவாக்கியுள்ளது:
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.எல்.ஏ-க்கள் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ரகசியமாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக-வின் சி.வி. சண்முகம் 15 எம்.எல்.ஏ-க்களுடன் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் இந்த நகர்வு எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட திட்டத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸிலேயே இத்தகைய பிளவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவது தவெக-விற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுக-வின் அதிகாரப்பூர்வத் தலைமை தவெக-விற்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் அதிமுக-வின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஒன்றிணைந்து ஒரு புதிய அரசியல் கணக்கைத் தொடங்குகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி ஆளுநர் மாளிகையைச் சாடி பேட்டியளித்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக வந்துள்ள தகவல், தமிழக அரசியலில் இன்று இரவு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸ்-தவெக கூட்டணி: தமிழக அரசியலில் புதிய மாற்றம்..!! ஓபனாக பேசிய கனிமொழி..!!