திராவிட முன்னேற்றக் கழகத்துடன் (திமுக) நீண்டகால கூட்டணியைத் தொடர்ந்து வந்த காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் தற்போது பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவிருக்கும் தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) இணைந்துள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1971ஆம் ஆண்டு முதல் திமுகவுடன் இணைந்து பல்வேறு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஒருங்கிணைந்து எதிர்கொண்ட காங்கிரஸ், இந்த முறை அந்த உறவை முறித்துக்கொண்டு புதிய அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ளது. இந்த திடீர் முடிவு திமுக தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இதுகுறித்து விரிவான கருத்து தெரிவித்துள்ளார்.

“அவர்களுக்கு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைத் தேர்வு செய்வது அவர்களின் உரிமை” என்று கூறிய கனிமொழி, காங்கிரஸுடன் திமுக கொண்டிருந்த நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். “நாங்கள் ஒன்றாக இணைந்து பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளோம். தற்போது நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளோம். இதுகுறித்து வேறு எதுவும் சொல்வதற்கில்லை. இருப்பினும், மக்களுக்கான போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சசிகலா காலில் விழுந்து ஆட்சிக்கு வந்தவர்.. எடப்பாடி பழனிசாமியை எகிறியடித்த கனிமொழி...!
2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், தன்னை மதச்சார்பற்ற அரசியல் சக்தியாக முன்னிறுத்தி வருகிறது. இதனைப் பாராட்டிய கனிமொழி, “ஒரே சித்தாந்தத்தைக் கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார். தி.மு.கவும் த.வெ.கவும் ஒத்த கருத்துகளைக் கொண்டிருப்பது தமிழக அரசியலுக்கு நல்லதே என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கனிமொழி உடனடி விமர்சனத்தைத் தவிர்த்தார். “இதுகுறித்து இப்பொழுதே கூறுவது சரியாக இருக்காது. நாங்கள் அதற்கான காரணங்களை விரிவாக ஆராய்ந்து வருகிறோம்” என்று அவர் பதிலளித்தார்.
இந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் அடுத்தக்கட்ட அரசியல் சூழலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து அரசியல் பார்வையாளர்கள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். காங்கிரஸ்-த.வெ.க இணைப்பு, எதிர்காலத்தில் தி.மு.கவின் தேர்தல் உத்திகளிலும், கூட்டணி அரசியலிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தை அழிக்க துடிக்கும் பாஜக.. காப்பாற்ற வேண்டிய கடமை எங்களுடையது..!! ஜோதிமணி எம்.பி சாடல்..!!