×
 

"கதவுகள் திறந்தே இருக்கு.. ஆனா கண்டிஷன் இதுதான்"! விஜயை முதல்வராக ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி - செங்கோட்டையன்

விஜயை முதல்வராக ஏற்பவர்களுக்கு மட்டுமே தவெக-வில் கதவுகள் திறந்திருக்கும் எனக் கோவையில் கே.ஏ. செங்கோட்டையன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே எங்களுடன் கூட்டணிக்கு வர முடியும்” எனத் தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழுத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெக-வின் கூட்டணி நிலைப்பாடு, திருமாவளவனின் விமர்சனங்களுக்குப் பதிலடி மற்றும் பொங்கலுக்குப் பிறகு கட்சியில் இணைய உள்ள முக்கியத் தலைவர்கள் குறித்து அடுக்கடுக்கான தகவல்களை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தற்போது தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் புயல் வேகத்தில் ஈடுபட்டு வரும் கே.ஏ.செங்கோட்டையன், இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அண்டை நாடான மலேசியாவில் ஒரு இந்திய நடிகருக்கு ‘ரோட் ஷோ’ நடத்த அனுமதி வழங்கப்பட்டது இதுவே முதல்முறை. 1972-ல் எம்.ஜி.ஆருக்கும், 1988-ல் ஜெயலலிதாவிற்கும் இருந்த அதே மக்கள் அலையை இன்று விஜயிடம் காண்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய்க்காக என் ரத்தம் சிந்துவேன்! மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்! 

விசிக தலைவர் திருமாவளவனின் “ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை” என்ற விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்த செங்கோட்டையன், “ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்து சொல்லலாம். ஆனால், இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த திருமாவளவன், அங்கே விருந்து உண்டுவிட்டுப் பரிசுப் பொருட்களை வாங்கி வந்த காலத்தையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்” எனச் சாடினார். மேலும், திமுக - பாஜக உறவு குறித்துப் பேசிய அவர், “இதே திமுக வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தபோது என்ன செய்தது என்பதைத் திருமாவளவன்தான் விளக்க வேண்டும். பாஜக எதிர்ப்பு குறித்து ஈரோடு கூட்டத்திலும், மலேசியாவிலும் எங்கள் தலைவர் மக்கள் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் தெளிவாகப் பதிலளித்துவிட்டார்” எனச் சூசகமாகத் தெரிவித்தார்.

கூட்டணி குறித்துப் பேசிய அவர், “காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக-வுடன் இணைய விரும்புவதாகக் கூறப்படும் கருத்துக்கள் இன்னும் எனது கவனத்திற்கு வரவில்லை. அப்படி வந்தால் அது குறித்துப் பரிசீலிக்கப்படும். அதேநேரம், விஜயை முதலமைச்சராக ஏற்பவர்கள் மட்டுமே எங்களுடன் கை கோர்க்க முடியும்” எனத் தெளிவுபடுத்தினார். இறுதியாக, “பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, அதாவது ஜனவரி முதல் வாரத்திற்குள் பல முக்கிய அரசியல் தலைவர்கள் தவெக-வில் இணைய உள்ளனர். தமிழக அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழப் போவதை நீங்கள் அப்போது காண்பீர்கள்” என ரகசியம் உடைத்துப் பேட்டியை நிறைவு செய்தார். செங்கோட்டையனின் இந்தத் தொடர் அதிரடிகள் கொங்கு மண்டல அரசியலில் தவெக-விற்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சீமான் RSS கடப்பாரை; விஜய் ஒரு முகமூடி! மீண்டும் விசிக தலைவர் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share