தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, திருவொற்றியூர், எண்ணூர், ராயபுரம், மதுரவாயல், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மூன்று மணி நேரத்துக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெயில் 40 டிகிரிக்கு மேல் நிலவும் சூழலில், ஏர் கண்டிஷனர் பயன்பாடு அதிகரித்ததால் மின்தேவை 21,000 மெகாவாட்டைத் தாண்டியுள்ளது. இந்த உச்ச தேவையை சமாளிக்க முடியாமல் மின்வாரியம் திடீர் தடைகளை விதிப்பதாகக் கூறப்படுகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் தடை, சிறு வியாபாரிகள் வருமான இழப்பு, மருத்துவமனைகளில் உபகரணங்கள் செயல்படாத நிலை, உயர்த்தப்பட்ட கட்டிடங்களில் லிஃப்ட் சிக்கல் போன்ற பிரச்சினைகள் தொடர்கின்றன.
இதையும் படிங்க: சிறுமி உடல் மீட்கப்பட்ட ஏரிக்கரையில் ஏடிஜிபி ஆய்வு! துவங்கியது உடற்கூராய்வு பணி! வெளிவரப்போகும் பகீர்!
இரவு நேர மின்வெட்டுகள் தூக்கத்தைப் பாதிப்பதோடு, பாதுகாப்பு அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. தண்டையார்பேட்டையில் நள்ளிரவில் தொடர்ந்து முன்னிட்டு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில் மின்வாரிய ஊழியர்களை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு பொதுமக்களிடம் இருந்து மின் ஊழியர்களை மீட்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு நிகழ்வாக கூறி நடக்கும் போராட்டங்கள் மற்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஒரு விசில் சப்தத்திற்கே ஆடிப்போயிட்டீங்களே! இதுதான் திராவிட மாடலா? தமிழக பாஜக கிண்டல்!