கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் உடல் ஏரிக்கரையில் இருந்து மீட்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அவருடன் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் மற்றும் சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் ஆகியோரும் இணைந்து குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். அப்போது சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க, “இந்த கொடூர செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என அமைச்சரிடம் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பொறுப்பேற்ற 12 நாளிலேயே இப்படியா? திமுக கண்டனம்! தவெக விஜய் அரசை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

இந்நிலையில், சிறுமியின் உடல் ஏரிக்கரையில் இருந்து மீட்கப்பட்டது. அந்த இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரி ஏ.டி.ஜி.பி. மகேஷ்வர் தயாள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்போது சிறுமியின் உடல் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கூராய்வு செய்யப்படுகிறது. கூராய்வு அறிக்கை வந்த பிறகே கொலையின் உண்மையான காரணம் முழுமையாக தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் பெரும் விவாதம் எழுந்துள்ளது. சிறுமியின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் சம்பத்குமார், “இந்தக் கொடூர சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்கும் வகையில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும்” என உறுதியளித்தார். சிறுமியின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சில்மிஷம்!! கார் டிரைவரை பொளந்து கட்டிய மக்கள்!