திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்த திடீர் கனமழையால் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவிலான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 ரூபாய் உடனடியாக நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், விவசாயத்தின் அடிப்படை வாழ்வாதாரமாக விளங்கும் மழையே, எதிர்பாராத நேரத்தில் டெல்டா மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து சுமார் 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்களை அடியோடு புரட்டிப்போட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராக இருந்த சூழலில், திடீரெனப் பெய்த கனமழையால் பாடுபட்டு விளைவித்த நெற்கதிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானதைக் கண்டு விவசாயிகள் சொல்லொணாத் துயரத்திலும் கண்ணீரிலும் தவிக்கின்றனர்; இவர்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும் எனச் சாடியுள்ளார்.

ஜூன் 12 அன்று குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையிலும், நிலத்தடி நீரை நம்பிக் கடன் வாங்கிப் பயிர் செய்திருந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தவெக அரசின் மெத்தனப் போக்கு கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். மேலும், தேர்தல் நேரத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற அனைத்து வேளாண் கடன்களும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு தவணை முறையில் சிறிது சிறிதாகத் தள்ளுபடி செய்யும் அறிவிப்புகளை வெளியிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: 'சரக்கு' பற்றி எழுந்த கேள்வி..!! சட்டென எடப்பாடி சொன்ன 'நச்' பதில்..!! என்னவா இருக்கும்..??
எனவே, மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்குக் கைகொடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளை உடனடியாக திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளுக்கு அனுப்பி, பயிர் சேத விவரங்களை முழுமையாகவும் துல்லியமாகவும் கணக்கெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீட்டுத் தொகையை எவ்வித தாமதமுமின்றி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தேர்தல் தோல்விக்கு தலைமை பொறுப்பல்ல! குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டி!