அலகாபாத் உயர் நீதிமன்றம் பெரும் அதிர்ச்சி தரும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீது இரட்டை குடியுரிமை வழக்கில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தர பிரதேச போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை உத்தர பிரதேச அரசே நேரடியாக விசாரிக்கலாம் அல்லது சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ராகுல் காந்திக்கு இந்தியாவுடன் பிரிட்டனிலும் குடியுரிமை இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. லண்டனைச் சேர்ந்த ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது, 2005 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டறிக்கைகளில் அவர் தன் பிரிட்டன் குடியுரிமையை வெளிப்படையாகக் குறிப்பிட்டிருந்ததாகவும், லண்டன் வீட்டு முகவரியையும் அதில் எழுதியிருந்ததாகவும் கூறப்பட்டது. இதன் அடிப்படையில் சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமை வைத்திருப்பதால் அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: பிரதமரை மந்திரவாதி எனக் கூறுவதா..? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு விளக்கம் கேட்டிருந்தது. கடந்த ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ் சிஷிர், லக்னோவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவும் ஜனவரியில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து விக்னேஷ் சிஷிர் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் மேல்முறையீடு செய்தார். நேற்று விசாரணைக்கு வந்த இந்த மனுவின்போது, ராகுலின் இரட்டை குடியுரிமை தொடர்பான பிரிட்டன் அரசின் மின்னஞ்சல்கள் மற்றும் ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் 2004 லோக்சபா தேர்தல் நேரத்தில் லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் தனக்கு கணக்கு இருப்பதாக ராகுலே ஒப்புக்கொண்டதாகவும் விக்னேஷ் சிஷிர் வாதிட்டார்.
இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரட்டை குடியுரிமை விவகாரத்தில் முறையான சரிபார்ப்பு அவசியம் எனக் கருதியது. அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் பதவி மற்றும் எதிர்கால அரசியல் பாதையில் இந்த வழக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!