திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களின் பெயர்களை தவெக அரசு மாற்றினாலும், தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களே மக்கள் மனதில் நீங்காமல் நிறைந்துள்ளன என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சியில் நடைபெறும் குளறுபடிகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தது முதல் இன்று வரை உருப்படியாக எந்தவொரு திட்டத்தையும் செய்யவில்லை. வெறும் தற்செயலான விபத்து காரணமாகவே அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டனர். இதன் காரணத்தினாலேயே, முந்தைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுள்ள திட்டங்களின் பெயர்களை தவெக அரசு தொடர்ந்து மாற்றி வருகிறது. ஆனால், திட்டங்களின் பெயர்களை எப்படி மாற்றினாலும், முதலமைச்சராய் இருந்த போது கழகத் தலைவர் கொண்டு வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களே இன்றளவும் மக்களின் மனங்களில் நிறைந்து நிற்கின்றன எனக் கூறினார்.
இதையும் படிங்க: தவெக அரசை கண்டித்து தஞ்சையில் ஆகஸ்ட் 3-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும் தொடர்ந்த அவர், திமுக அரசு கொண்டு வந்த பல்வேறு நலத் திட்டங்களின் உண்மையான பயன்களைத் தமிழக மக்கள் தற்போது உணர ஆரம்பித்து விட்டனர். தாய் உள்ளத்தோடு 'தாயுமானவன்' உள்ளிட்ட பல உன்னதமான திட்டங்களை ஸ்டாலின் அரசு கொண்டு வந்தது. அவர்கள் எந்தப் பெயரை மாற்றி அமைத்தாலும், அதை மாற்ற மாற்ற மக்கள் மத்தியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயர் தான் எதிரொலிக்கும் என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்துக் குறிப்பிட்ட ஆர்.எஸ்.பாரதி, திமுகவில் தீவிரமாகவும் அர்ப்பணிப்போடும் பணியாற்றி வருபவர் செந்தில் பாலாஜி. அவரை பழிவாங்கும் நோக்கில் அரசியல் செய்யப் பார்க்கிறார்கள். எந்தக் கொம்பனாலும் ஒரு உண்மையான திமுககாரனைப் பழிவாங்கவோ, அழிக்கவோ முடியாது. மாநிலத்தில் தற்போது ஒரு அரசாங்கம் நடப்பதற்கான எந்தவொரு அடையாளமுமே தெரியவில்லை. தெளிவு இல்லாத, திறமை இல்லாத ஒரு சர்க்கார் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது எனச் சாடினார்.
இறுதியாக மின்கட்டண விவகாரம் குறித்துப் பேசிய அவர், கூடுதல் மின்கட்டண வசூல் என்ற பெயரில் மக்களிடமிருந்து பணத்தைச் சுரண்டி, மின்துறை பகிரங்கமாகத் திருடி வருகிறது. இதுவும் ஒரு வகையான மாபெரும் மோசடியே ஆகும் என தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
இதையும் படிங்க: திமுக தாரைவார்த்த உரிமைகளை மீட்டோம்! 151 மருத்துவ இடங்கள் விவகாரத்தில் அமைச்சர் அருண்ராஜ் அதிரடி!