கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய சபரிவர்மன் என்பவர் சட்டவிரோதமாகக் குட்கா விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜூலை மாதம் 9-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, அம்மாவட்டத்திலுள்ள சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. சபரி வர்மன் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், நாகர்கோவிலில் சிறை கைதி சபரிவர்மன் கொலையில் அதிர்ச்சி தரும் கூறாய்வு அறிக்கை வெளியானது.
கொடூரமான தாக்குதலால் வியாபாரி சபரி வர்மன் மூச்சு திணறி மரணம் அடைந்திருப்பதாக ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல்வேறு பகுதிகளிலும் ரத்தக் கட்டுகள் மற்றும் உராய்வு காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் உறுப்புகளை பரிசோதித்ததில் மூளை மற்றும் அதன் ரத்த நாளங்கள் மற்றும் கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.

சபரிவர்மன் மரணத்தில் மௌனம் காக்கும் கோழை முதல்வர் என்று திமுக விமர்சித்து உள்ளது. நாகர்கோவில் சிறையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட சபரிவர்மன் குடும்பத்தினரின் கண்ணீருக்கு, முதல்வர் விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சிறைக்குள் சபரி வர்மனுக்கு நடந்தது என்ன..? யார் பொறுப்பு..? வேல்முருகன் சரமாரி கேள்வி..!!
உங்கள் காவல்துறை செய்த கொடூரத்தை மூடி மறைக்க, 10 லட்சம் ரூபாயையும் அரசுப் பணியையும் வழங்கி, பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வாயை அடைக்கப் பார்க்கிறீர்கள் என அதை நிராகரித்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிவர்மனின் உடலை வாங்க மறுத்து, கடந்த 5 நாட்களாக அவரது உறவினர்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர் என்றும் ஆனால், உங்கள் அதிகார மமதை குறையவில்லையே என கூறியுள்ளது. தேர்தல் நேரத்தில் ஓட்டு வாங்க அலைந்த உங்களுக்கு, ஆட்சிக்கு வந்ததும் சாமானிய மக்களின் உயிருக்கு மதிப்பு கொடுக்கத் திராணியில்லையா என்று சாடியது.
இதையும் படிங்க: வேலுமணி, செந்தில்பாலாஜி இல்லாமல் தேர்தல் தயாரிப்பில் கட்சிகள்... கோவையில் மாறும் அரசியல் கணக்கு!