"சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்த பிறகும், கூடுதல் டிஜிபி அருணை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பதவியில் தொடரச் செய்வது நேரடியான நீதிமன்ற அவமதிப்பாகும்" என்று அரசியல் விமரிசகர் சவுக்கு சங்கர் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தனது வழக்கறிஞர்களைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துப் பல அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் சவுக்கு சங்கர் பேசியதாவது, "கூடுதல் டிஜிபி அருண் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் அல்ல என்பது குறித்து நீதிமன்றம் தனது தீர்ப்பிலேயே மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளது. அந்தத் தீர்ப்பு வெளியாகி 4 நாட்கள் கடந்த பின்னரும் அவர் அதே பதவியில் நீடிப்பதை அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைமைச் செயலாளர் சாய்குமார் மற்றும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் இந்த விவகாரத்தை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில், புதிய முதலமைச்சர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசு தவறான வழியில் வழிநடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது" என்று குறிப்பிட்டார். மேலும், சென்னை மாநகர காவல்துறைக்குச் சொந்தமான 5 வாகனங்கள் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையில் பயன்படுத்தப்படுவதாகவும், சென்னை காவல்துறையில் பணிபுரியும் சுமார் 20 காவலர்கள் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் விதிகளுக்குப் புறம்பாகப் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அரசு வாகனங்களின் தவறான பயன்பாடு மற்றும் ஆடலி முறைக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பல தீர்ப்புகளில் கருத்து தெரிவித்துள்ளதை அவர் இந்த வேளையில் நினைவூட்டினார்.
தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சவுக்கு சங்கர், "அண்ணாமலை எனக்கு நெருங்கிய நண்பர்; எனது இக்கட்டான சூழ்நிலைகளில் என்னுடன் நின்றவர். அவர் புதிய கட்சி தொடங்குவதற்குப் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன" என்று தெரிவித்தார். மேலும், கடந்த 2 ஆண்டுகளில் 200 நாட்களுக்கும் மேலாகத் தான் சிறையில் இருந்ததாகவும், அதனால் பல இழப்புகளைச் சந்தித்துள்ளதாகவும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார். இறுதியாகத் திமுக-வின் தற்போதைய நிலை குறித்துப் பேசிய அவர், "தேர்தல் தோல்விக்கான பொறுப்பை யார் ஏற்க வேண்டும் என்பது தொடர்பாகத் திமுக-வுக்குள் தற்பொழுது கடுமையான குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது; கட்சிக்குள் பல்வேறு தரப்பினர் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்" என்று கூறிப் பேட்டியை முடித்தார். சவுக்கு சங்கரின் இந்த அதிரடிப் பேட்டி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: குண்டர் சட்டம் போட்டது அக்கிரமம்.. ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
இதையும் படிங்க: ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!