தமிழ்நாட்டின் தனித்துவமிக்க சமூக-பண்பாடு, மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் இலக்கியச் செறிவை மாணவர்கள் ஆழமாக அறிந்துகொள்ளும் வகையில், 'மாநிலக் கல்விக் கொள்கை-2025'-இன் கீழ் புதிய கலைத்திட்டத்தை வடிவமைக்க விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் மாற்றிமைக்கப்பட்ட புதிய உயர்மட்டக் குழுவை அமைத்து" தமிழக பள்ளிக்கல்வித்துறை மிக முக்கிய அரசாணையை வெளியிட்டுள்ளது.
\தமிழகப் பள்ளி மாணவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும், கற்றல்-கற்பித்தல் மேம்பாட்டையும் உறுதி செய்யும் நோக்கில், தற்போதைய கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மதிப்பீட்டு முறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கற்றல் அடைவிற்கும் கற்பித்தல் நோக்கங்களுக்கும் இடையே நிலவும் இடைவெளிகளைக் களைந்து, ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் கல்விசார் கருத்துக்களை ஒருங்கிணைத்து புதிய பரிந்துரைகளை வழங்க கடந்த நவம்பர் மாதம் கலைத்திட்ட வடிவமைப்புக் குழு ஒன்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக இக்குழுவின் தலைவராக மாநிலத் திட்டக் குழு உறுப்பினரும், முன்னாள் புதுக்கல்லூரித் துறைத் தலைவருமான முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இக்குழு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை இந்த புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் இணைந்து கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் முத்திரை பதித்த விஞ்ஞானி தா.வீ.வெங்கடேஷ்வரன், சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் ரீட்டா ஜான், கல்வியியல் வல்லுநர்கள் முனைவர் அசோகன், முனைவர் மதிவாணன், முனைவர் ஏஞ்சல் ரத்னாபாய் மற்றும் பிரபல ஓவியர் மணியம் செல்வன் உள்ளிட்ட 14 முக்கிய ஆளுமைகள் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்தக் குழுவில் இரண்டு பேர் உறுப்பினர் செயலர்களாகச் செயல்படுவார்கள் என்றும், ஆர்.டி.ஐ ஆர்வலரான அனந்தஜித் மாகியா என்பவரும் இதில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது; எனினும் அனந்தஜித் மாகியா குறித்த கூடுதல் விபரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.
இதையும் படிங்க: 59 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் அமைச்சர்கள்: தொண்டர்களின் கண்ணீருக்குக் கிடைத்த வெற்றி - அமைச்சர் ராஜேஷ்குமார்!
பள்ளிக்கல்வித்துறையின் இந்த புதிய அரசாணையின்படி, மாற்றியமைக்கப்பட்ட இக்குழுவின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், உறுப்பினர்களின் தகுதிக்கு ஏற்ப கௌரவ ஊதியம், பயணப்படி மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட இதர வசதிகளைச் செய்து தருவதற்கும் முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் சூழலியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் இந்த மாபெரும் கல்விசார் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள ஏதுவாக, பாடத்திட்ட மற்றும் பாடநூல் உருவாக்கத்திற்குத் தேவைப்படும் கூடுதல் துணைக்குழுக்களை (Sub-committees) தன்னாட்சியோடு அமைத்துக்கொள்ள மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) இயக்குநருக்கு அரசு கூடுதல் அதிகாரத்தையும், அனுமதியையும் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: வளர்ந்த தமிழகத்தின் மூலமே வளர்ந்த இந்தியா சாத்தியமாகும்: ஆளுநர் அர்லேகர் பேச்சு!