தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை மட்டுமன்றி, மற்ற நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர பொது இடங்களில் எருது, காளை உள்ளிட்ட மாடுகள் மற்றும் ஆடு உள்ளிட்ட விலங்கினங்களைப் பலியிடக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் சட்ட ரீதியான நகர்வு மூலம் பெறப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எஸ்டிபிஐ (SDPI) கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் மனதார வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போது கிடைத்துள்ளது இடைக்கால உத்தரவு மட்டுமே என்பதால், வழக்கில் முழுமையான வெற்றி பெறவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தடைகள் மீண்டும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்தவும் தமிழக அரசு சில முக்கியமான சட்டத்திருத்த நடவடிக்கைகளில் உடனடியாகத் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது என்று SDPI கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அப்போதுதான் இவ்விவகாரத்தில் அரசு எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களையும், மக்களின் பாரம்பரிய மத மற்றும் உணவு உரிமைகளில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளையும் நிரந்தரமாகக் களைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மத வழிபாட்டு உரிமை மற்றும் மக்களின் பாரம்பரிய உணவு உரிமைகளைப் பாதுகாப்பது ஒரு மக்கள் அரசின் முதன்மைக் கடமையாகும் என்பதால், தமிழ்நாடு அரசு பின்வரும் சட்டங்களில் உடனடியாகத் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது: தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1958 (Tamil Nadu Animals Preservation Act, 1958) தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998 மற்றும் விதிகள், 2023 (Tamil Nadu Urban Local Bodies Act, 1998 and Rules, 2023) தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 (Tamil Nadu Public Health Act, 1939)
இதையும் படிங்க: அரசு வேலை கொடுத்தால் சிபிஐ விசாரணை பாதிக்கும்! கரூர் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு!

மேற்கண்ட சட்டங்களில் மதச் சடங்குகள், பண்டிகைகள் மற்றும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளுக்கான விலங்குப் பலிக்கு முறையான சட்டப்பூர்வ விலக்கை உறுதி செய்யும் வகையில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என முகம்மது முபாரக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், மத்திய அரசின் 'விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறாத வகையிலும், சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மத வழிபாட்டு உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தெளிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட வேண்டும் என்றும், இது இஸ்லாமியர்களின் புனித குர்பானி திருநாள் மற்றும் இந்து உள்ளிட்ட மற்ற சமூக மக்களின் பாரம்பரிய கிராமப்புறக் கோவில் கொடை விழாக்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் ஒரு சமத்துவ நடவடிக்கையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த உணர்வுப்பூர்வமான விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையான சட்டத்திருத்தங்களையும், புதிய வழிகாட்டுதல்களையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக மேற்கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களின் மத மற்றும் உணவு உரிமைகளையும் உறுதி செய்ய வேண்டும் என SDPI கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆர்.கே.நகர் வெற்றிக்கு எதிராக வழக்கு! அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!