தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டம் ஆலம்பட்டிபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று 'மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு' பிரமாண்டமாக நடைபெற்றது.
திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் எனத் தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவி வரும் சூழலில், பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். மற்ற கட்சிகளுக்கு முன்னதாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து சீமான் தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளார்.
ஆலம்பட்டி புதூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாடுகுத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கப்பட்டது. மாநாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக ஐந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட 234 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் மேடையில் அமர வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு... ஸ்தம்பிக்கும் திருச்சி... சீமானுக்கு உற்சாக வரவேற்பு..!!
மாநாட்டில், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஆண் - பெண் சமநிலையைப் பேணும் வகையில் 117 பெண் வேட்பாளர்கள், 117 ஆண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. வேட்பாளர்களின் கல்வித் தகுதியைப் பொறுத்தவரை 40 பேர் பொறியாளர்கள், 33 பேர் வழக்கறிஞர்கள், 15 பேர் மருத்துவர்கள் நா.த.க சார்பில் போட்டியிடுகின்றனர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் உள்ள காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளார். இதுமட்டுமின்றி வீரப்பனின் மகளான வித்யாராணி மேட்டூரிலும், இயக்குநர் களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும், ஜல்லிக்கட்டு ராஜேஷ் திருவெறும்பூரிலும், இடும்பவனம் கார்த்திக் வேதாரண்யத்திலும் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: என்ன மக்களே ரெடியா? காரைக்குடியில் சீமான் பேட்டி? வெளியான முக்கிய தகவல்..!!