2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நோக்கி சரமாரியான கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக மதுவிலக்கு மற்றும் அரசியல் நிலைப்பாடு குறித்து அவர் பேசியது அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் எடுத்து வரும் நிலைப்பாடுகள் குறித்து சீமான் தனது உரையில் கடுமையாக விமர்சித்தார்: செந்தில் பாலாஜி குறித்துப் பேசிய விஜய், அவர் மீதான வழக்குகளைப் பற்றிப் பாடிய விஜய், இதுவரை எங்கேயாவது 'நான் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை (TASMAC) மூடுவேன்' என்று பேசியதுண்டா? மது ஒழிப்பு குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன? என சீமான் கேள்வி எழுப்பினார். மாறி மாறி திமுக மற்றும் அதிமுகவிற்கு வாக்களித்து உங்கள் பிள்ளைகளை வீதியில் போட்டுவிட்டீர்கள். இப்போது மீண்டும் ஒரு மாற்றத்தைத் தேடி அலைகிறீர்கள். ஆனால் அந்த மாற்றம் கொள்கை ரீதியானதாக இருக்க வேண்டும்" எனத் தொண்டர்களிடையே பேசினார்.

தனது அரசியல் கொள்கையை விளக்கிய சீமான், மனிதநேயத்தைப் போற்றும் வகையில் உரையாற்றினார். உங்களுக்குச் சாதி வேண்டும், மதம் வேண்டும் என்றால் என்னிடமிருந்து தூரம் போய்விடுங்கள். ஆனால், உங்களுக்கு உண்மையான 'மனிதநேயம்' வேண்டும் என்றால் என்னை வந்து பிடித்துக்கொள்ளுங்கள். நாம் தமிழர் கட்சி பிரிவினைக்கு எதிரானது, மனிதநேயத்திற்குச் சார்பானது.
இதையும் படிங்க: த.வா.க. வேட்பாளர் பட்டியல் 2026: 100 தொகுதிகளில் வேல்முருகன் அதிரடி.. முத்துலட்சுமி வீரப்பன் போட்டி!
திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் எதிர்காலத்தைச் சீரழித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், கடந்த 50 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அடைந்த பலன் ஏதுமில்லை என்று சாடினார். "கல்வி, மருத்துவம், குடிநீர் என அடிப்படைத் தேவைகளைக் கூடத் தரம் உயர்த்த முடியாதவர்கள் மீண்டும் வாக்குக் கேட்க வருகிறார்கள்" என்று அவர் விமர்சித்தார்.
காரைக்குடி தொகுதியில் தனித்துப் போட்டியிடும் சீமான், இன்று தனது குடும்பத்தினருடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், தனது பிரச்சாரத்தை அங்கேயே தீவிரப்படுத்தியுள்ளார். தவெக மற்றும் நாம் தமிழர் ஆகிய இரு கட்சிகளுமே இளைஞர்களின் வாக்குகளை இலக்கு வைப்பதால், விஜய்யை நோக்கிய சீமானின் இந்த விமர்சனம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் பிரசாரப் பயணம்: திருத்தணியில் ஏப்ரல் 1 முதல் தொடக்கம்!