தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி (நாதக) முழு தீவிரத்துடன் களமிறங்கியுள்ளது. கட்சித் தலைவர் சீமான் தலைமையில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது, ஆண்களுக்கு நிகராக பெண்களும் வேட்பாளர்களாக இடம்பெற்றுள்ளனர். இளைஞர்கள், பெண்கள், முதல் முறை வாக்காளர்களை குறிவைத்து தேர்தல் பணிகளை சீமான் முடுக்கிவிட்டுள்ளார்.
கடந்த தேர்தல்களில் நாதகம் 2ஆம் அல்லது 3ஆம் இடம் பிடித்த தொகுதிகளை ஆராய்ந்த கட்சி, அங்கு ஓட்டு வங்கி பலமாக இருப்பதை கண்டறிந்துள்ளது. இதனால் மொத்தம் 60 தொகுதிகளை (காரைக்குடி, திருவள்ளூர், வேதாரண்யம் உள்ளிட்டவை) 'மிக உயர் முன்னுரிமை' பட்டியலில் வைத்துள்ளது. இந்த 60 தொகுதிகளில் வீடு வீடாக சென்று இளைஞர்கள், பெண்கள், புதிய வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!
சீமான் சென்னைக்கு இந்த 60 தொகுதிகளின் நிர்வாகிகளை அழைத்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்கு அவர் வழங்கிய அறிவுரைகளை நிர்வாகிகள் பகிர்ந்துள்ளனர். “இப்போதைய சாதகமான நிலையை விட்டுவிடக் கூடாது. வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பை தக்க வைக்க முடியும்.

234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும், இந்த 60 தொகுதிகளில் மும்மடங்கு கவனம் செலுத்துங்கள். அப்படி செய்தால் நிச்சயம் 10 தொகுதிகளில் வெற்றி உறுதி. அது இப்போதே எங்கள் கண்களுக்கு தெரிகிறது” என்று சீமான் தெளிவுபடுத்தியுள்ளார்.
நாதக நிர்வாகிகள் கூறுகையில், “தலைவர் சீமானுக்கு இம்முறை எப்படியும் சட்டசபைக்குள் நாம் தமிழர் கட்சி எம்எல்ஏக்கள் செல்ல வேண்டும் என்பதே முதல் இலக்கு. அது இரட்டை இலக்க எண்ணிக்கையாக (10+) இருந்தால் இன்னும் சிறப்பு. தற்போதைய லட்சியம் 60 தொகுதிகளில் கவனம் செலுத்தி குறைந்தது 10 இடங்களை உறுதி செய்வது. இளைஞர்கள் மத்தியில் கட்சி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளது. பெண்கள் வேட்பாளர்கள் அதிகம் இருப்பதால் பெண் வாக்காளர்களின் ஆதரவும் கிடைக்கும்” என்றனர்.
திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகளுக்கு இடையே மூன்றாவது அணியாக நாதகம் தனித்து போட்டியிடுவதால், தேர்தல் களத்தில் புதிய சமன்பாடு உருவாகியுள்ளது. சீமானின் இந்த உத்தி வெற்றி பெறுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும். ஆனால் 60 தொகுதிகளில் தீவிர களப்பணி தொடங்கியுள்ளது நிச்சயம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிவகங்கைக்கு குறி வைக்கும் சீமான்? தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி!! வெற்றி வாய்ப்பு!?