தமிழகம் அடுத்த இரண்டு மாதங்களில் 17-வது சட்டசபைத் தேர்தலை சந்திக்க உள்ளது. இம்முறை திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உருவாகியுள்ளது. கூட்டணி அமைப்பதிலேயே பெரும் இழுபறி நிலவுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஆளும் திமுக கடந்த 2021 தேர்தல் போலவே காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றுடன் கூட்டணியைத் தொடர்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்த மக்கள் நீதி மய்யம் கூடுதல் வலு தருகிறது.
ஆனால் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை உன்னிப்பாகக் கவனித்து வரும் திமுக, கூட்டணியை அசுர பலத்துடன் கட்டமைக்க முயல்கிறது. அதற்காக தேமுதிக மற்றும் பாமக (டாக்டர் ராமதாஸ் அணி) ஆகியவற்றை இழுக்க முயற்சி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மயிலாப்பூருக்கு அதிகரிக்கும் மவுசு! முட்டி போதும் அரசியல் கட்சிகள்? 2026-ல் கைப்பற்றப்போவது யார்?
ஆனால் கூட்டணியில் உள்ள தேசியக் கட்சியான காங்கிரஸ், கூடுதல் தொகுதிகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என பல கோரிக்கைகளை வைத்துள்ளது. இதனால் திமுக இதுவரை எந்தக் கட்சியுடனும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணிக் குழுவும் இன்னும் அமைக்கப்படவில்லை.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பாஜக, பாமக (டாக்டர் அன்புமணி அணி), அமமுக, தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவை இழுக்க பேச்சு நடந்தது.
ஆனால் அதிக எதிர்பார்ப்பால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி கதவை மூடினார். இருப்பினும் பாஜக புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளை இழுக்க முயல்கிறது.

சென்னையில் நடந்த அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி, விரும்பிய கூட்டணி அமைந்துவிட்டது என்று கூறினார். ஆனால் நிர்வாகிகள் “திமுகவின் பிரமாண்ட கூட்டணிக்கு முன் நம்மால் எடுபட முடியுமா?” என்ற கேள்வியை எழுப்பினர். தேமுதிகவை மீண்டும் அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கிடையே தவெக ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்று கூட்டணிக்கு வலை விரித்து காத்திருக்கிறது. திமுக-அதிமுக கூட்டணியில் அதிருப்தியடைபவர்கள் கடைசி நேரத்தில் தங்கள் பக்கம் வருவார்கள் என்று நம்புகிறது. ஆனால் இதுவரை யாரும் வரவில்லை.
நாம் தமிழர் கட்சி மட்டும் ஆரம்பம் முதலே தனித்துப் போட்டியிடும் கொள்கையுடன் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தேர்வு செய்து முடித்துள்ளது. ஆண்-பெண் சரிசமமாக 50:50 இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. வரும் 21-ஆம் தேதி திருச்சியில் நடக்கும் மாநாட்டில் அனைத்து வேட்பாளர்களையும் அறிமுகம் செய்ய உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார்.
திமுக, அதிமுக இரு அணிகளும் கூட்டணி இழுபறியில் சிக்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டுமே தேர்தல் பந்தயத்தில் வேகமாக ஓடத் தொடங்கியுள்ளது. கூட்டணி முடிவு தாமதமாவதால் தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு ஆகியவை பின்னடைந்து வருகின்றன.
இதையும் படிங்க: 21 கூட்டணி கட்சிகளுடன் களமிறங்கும் திமுக! வாக்கு சிதறலை தடுக்க மெகா வியூகம்!! ஸ்டாலின் ஃபார்முலா!