சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே, போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற பிரபல ரவுடியைக் காவல் துறையினர் தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த என்கவுண்டர் சம்பவத்தில் ரவுடியின் காலில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் (30) என்பவர் மீது கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் சுமார் 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரைப் பிடிக்கக் காவல் துறையினர் நீண்ட நாட்களாகத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

மானாமதுரை காவல் ஆய்வாளர் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார், திருப்பாச்சேத்தி அருகே உள்ள கானூர் சுடுகாட்டுப் பகுதியில் ரவுடி ஊர்க்காவலன் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்தனர். போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற ஊர்க்காவலன், அவர்களை அரிவாளால் தாக்கத் தொடங்கினார்.
இதையும் படிங்க: பொம்மை முதல்வராக இருக்கிறார் ஸ்டாலின்! சிவகங்கை வன்முறையை குறிப்பிட்டு இபிஎஸ் கண்டனம்!
ரவுடியின் இந்தத் தாக்குதலில் மானாமதுரை காவல் ஆய்வாளர் குமார் காயமடைந்தார். அவரைத் தொடர்ந்து தாக்க முயன்றதால், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் தற்காப்பிற்காகவும் ஆய்வாளர் தனது துப்பாக்கியால் ஊர்க்காவலனை நோக்கிச் சுட்டார்.
இதில் ஊர்க்காவலனின் வலது காலில் குண்டு பாய்ந்து அவர் நிலைகுலைந்து விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட போலீசார், பலத்த பாதுகாப்புடன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து திருப்பாச்சேத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த காவல் ஆய்வாளர் குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் ரவுடிகள் மீது நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம், அப்பகுதி குற்றவாளிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கை காட்டுனாராம்... வைரல் ஆச்சாம்..! இவரெல்லாம் முதல்வர்... சிவகங்கை தாக்குதல் சம்பவத்தால் கொந்தளித்த இபிஎஸ்..!!