சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் தி.மு.க. தலைமை பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக்) மற்றும் தேமுதிக ஆகியவை சென்னை தொகுதிகளை கேட்டு அடம் பிடிப்பதால், பங்கீட்டில் முடிவெடுக்க முடியாமல் முதல்வர் ஸ்டாலின் திணறி வருகிறார்.
தி.மு.க. தொகுதி பங்கீடு குழு நிர்வாகி ஒருவர் வெளியிட்ட தகவலின்படி, “கூட்டணி பேச்சுவார்த்தையிலேயே காங்கிரஸ் கட்சி தி.மு.க.வை கதற விட்டுவிட்டது. இப்போது தொகுதி பங்கீட்டிலும் அதே நிலைமை தொடர்கிறது” என்றார்.
காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே வென்ற வேளச்சேரி தொகுதியுடன், அண்ணா நகர் மற்றும் தி.நகர் தொகுதிகளையும் கேட்டுள்ளது. இவற்றில் இரண்டு தொகுதிகளை உறுதி செய்தால்தான் தொகுதி பங்கீட்டில் கையெழுத்து போட முடியும் என்று காங்கிரஸ் மேலிடம் கறாராக நிலைப்பாடு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!
அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்.கே.நகர், ராயபுரம், பல்லாவரம் தொகுதிகளை கேட்டுள்ளது. இதில் ஒரு தொகுதியையாவது உறுதி செய்ய வேண்டிய நிலையில் தி.மு.க. தலைமை உள்ளது. கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிகவும் விருகம்பாக்கம் தொகுதியை வேண்டும் என்று உறுதியாக நிற்கிறது.

சென்னை மாவட்டத்தில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தாக்கம் அதிகமாக இருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, சென்னைக்குள் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு தி.மு.க.வின் செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். ஆனால், கூட்டணிக் கட்சிகள் இந்த நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தி.மு.க. நிழலில் எளிதாக வெற்றி பெறலாம் என நினைத்து சென்னைக்குள் அதிக தொகுதிகளை கேட்டு அடம் பிடித்து வருகின்றன.
இந்த சிக்கல்களால் தான், கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் அறிவிப்பு தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டிருக்கிறது. தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்னும் சிக்கலான நிலையில் உள்ளது.
கூட்டணியில் உள்ள கட்சிகளின் அதிகப்படியான கோரிக்கைகள் தி.மு.க. தலைமைக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தொகுதி பங்கீட்டை விரைவில் முடித்து, தேர்தல் பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் தி.மு.க.வுக்கு இந்த உள் இழுபறி பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 3-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை?! புதுச்சேரி நிகழ்ச்சியில் காத்திருக்கும் ட்விஸ்ட்! பாஜகவினர் உற்சாகம்!