புதுடெல்லி: மருத்துவர்களை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் செல்வாக்கு அல்லது பதவியை பயன்படுத்தி மருத்துவமனைகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள நகராட்சி மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் பரபரப்பான சம்பவம் நடைபெற்றது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி, சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான குழுவினர் மருத்துவமனைக்குள் சென்று, பெண் மருத்துவர் உள்ளிட்ட ஊழியர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையும் படிங்க: பா.சிதம்பரத்திற்கு அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்? கோபித்துக் கொண்ட ராகுல்காந்தி! காங்கிரசில் சர்ச்சை!
இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் மத்ரே கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து, வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், அந்த ஜாமினுக்கு தடை விதித்ததுடன், ரமேஷ் மத்ரே சரணடையவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ரமேஷ் மத்ரே தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது.
அப்போது, மருத்துவர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக் கூடாது என்றும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். அரசியல் அதிகாரம் மற்றும் பதவியை பயன்படுத்தி மருத்துவமனைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.
மேலும், கும்பலாக வந்து தாக்குதல் நடத்தும்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்படும் அச்சம், மன உளைச்சல் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர்.
இதற்கிடையே, ரமேஷ் மத்ரே தரப்பு தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றது. அவரது ஜாமினை முழுமையாக ரத்து செய்யக் கோரி மகாராஷ்டிர அரசு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!