சென்னை: மாநிலத்தின் நிதிநிலையை சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பல்வேறு துறைகளில் ஏற்பட்டு வரும் வருவாய் இழப்புகளை கட்டுப்படுத்தி இந்த ஆண்டிலேயே ரூ.20,000 கோடி வரை கூடுதல் வருவாய் ஈட்ட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட மாநில நிதிநிலை வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன் சுமை 13 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அரசின் வருவாயை அதிகரிப்பதற்கும், தேவையற்ற நிதி இழப்புகளைத் தடுக்கவும் பல்வேறு துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதிகாரிகள் தரப்பில் வெளியாகும் தகவல்களின்படி, கனிமவளத் துறையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் முறைகேடுகள் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிரானைட், சுண்ணாம்புக்கல், இரும்புத்தாது உள்ளிட்ட கனிம வளங்களின் குத்தகை மற்றும் சுரங்க நடவடிக்கைகளில் கண்காணிப்பை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: வெள்ளை அறிக்கையால் திருப்தியில்லை? அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்த முதல்வர் விஜய்!!

அதேபோல், பெருநகரங்களில் நடைபெறும் சொத்து பதிவுகளில் சந்தை மதிப்பை விட குறைவான மதிப்பீட்டில் பதிவு செய்யப்படுவதால் அரசுக்கு கிடைக்க வேண்டிய முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டண வருவாயும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதை சரிசெய்ய வழிகாட்டுதல் மதிப்பை மறுஆய்வு செய்து, சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
மேலும், ஜிஎஸ்டி, முத்திரைத்தாள் வரி, ஆயத்தீர்வை உள்ளிட்ட வரி வசூல் பிரிவுகளிலும் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் வருவாய் கசிவுகளை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்கிறது.
அரசுத் துறைகளின் ஒப்பந்தப் பணிகளிலும் செலவுக் கட்டுப்பாடு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் போட்டி அடிப்படையிலான வெளிப்படையான டெண்டர் முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்த அனைத்து நடவடிக்கைகளின் மூலமாக, அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புகளை குறைத்து, இந்த ஆண்டிலேயே ரூ.20,000 கோடி வரை கூடுதல் வருவாயை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில் அரசு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒப்பந்ததாரர் தேர்வில் வெளிப்படை தன்மை! பொதுப்பணி துறையில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை!