முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெறும் என்றும் தமிழகத்தில் உள்ள பல பிரச்சனைகளை மூடி மறைத்து விட்டு நல்லாட்சி நடத்துவது போல மாய தோற்றத்தை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

தமிழுக்காக நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்று சொல்பவர்கள் தூத்துக்குடியில் உள்ள தேசிய கவி பாரதியாரின் இல்லம் சிதைந்து போய் உள்ளதை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். உடனடியாக பாரதியாரின் இல்லத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைப்பதாகவும் தமிழுக்காக இவர்கள் பேசுவது அனைத்தும் நாடகம்தான், தமிழைக் காப்பது என்பதும் தமிழ் மொழியை காப்பாற்றியவர்களை காப்பது என்பதும் இவர்களிடம் இல்லை என்பதை பாரதியார் இல்லத்தின் நிலைமையை காட்டுவதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக காரங்க கமுக்கமா மாநாட்டுல கலந்துப்பாங்க.. ஒரே போடாக போட்ட தமிழிசை..!

மாணவ மாணவியர்கள் மீது திமுக அரசுக்கு அக்கறையில்லை என்றும், சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் விடுதியில் ஏராளமான குறைபாடுகள் இருப்பதால் வீதியில் வந்து போராட வேண்டிய நிலை இருப்பதாகவும், இது வேதனை அளிக்கக்கூடிய விஷயம் எனவும் அவர் கூறினார். அதேபோல கும்பம் குழியுமாக இருந்த சாலையால், தாய் கண் முன்னே குழந்தை இறந்த சம்பவம் மனவேதனை அளிக்கிறது என்றும் முந்தைய ஆட்சியில் சின்ன சின்ன விஷயங்களை கூட ஊதி பெரிதாக்கினார்கள்., ஆனால் இப்போது பெரிய விஷயங்களை கூட மறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தமிழிசை முன்வைத்தார்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்துவது, ரோடு ஷோ செல்வது, ஒன் டு ஒன் நடத்துவது என விளம்பரம் மட்டுமே செய்து கொண்டிருப்பதாகவும், தேர்தலுக்காக இல்லாமல் போராடும் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் நடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் கருத்து தொடர்பாக பேசினார். இதைவிட கொடூரமான ஒரு கருத்தை யாராலும் சொல்ல முடியாது என்றும் இவர்கள் ஆட்சியில் நடந்தால் எல்லாம் இயல்பானது எனக் கூறுவதாகவும் தமிழக அமைச்சர்கள் இறுமாப்போடு இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: கல்லூரிக்கே கட்டிடம் இல்ல.. எய்ம்ஸ் பத்திலாம் பேசலாமா? நக்கலடித்த தமிழிசை..!