×
 

முதலமைச்சர் வந்தால் எழுந்து நிற்க வேண்டுமா? சர்ச்சைக்கு ஃபுல்ஸ்டாப் வைத்த சபாநாயகர்..!!

முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமெனில் எதிர்க்கட்சித் தலைவருக்கும் நிற்க வேண்டுமா? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை என சபாநாயகர் தெளிவுபடுத்தினார். இது தொடர்பான விவாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது.

முதலமைச்சர் விஜய் சட்டசபைக்குள் நுழைந்தபோது, அவை உறுப்பினர்கள் வழக்கம் போல வணக்கம் தெரிவித்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அமர்ந்தவாறே இருந்தார். அவரது முகத்தை நேருக்கு நேர் பார்க்காமல், வணக்கம் கூட தெரிவிக்காத நிலை காணப்பட்டது. இதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரமேஷ் பேசினார்.

அவர் கூறியதாவது: “முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். முதலமைச்சர் எங்களுக்கு அறிவுரை வழங்கியது போல, எதிர்க்கட்சித் தலைவருக்கும் கண்ணியம் குறித்து அறிவுரை வழங்க வேண்டும். எட்டு கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் முதலமைச்சர் வரும்போது, அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரியாதை செலுத்தும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டும்” என்றார். 

இதையும் படிங்க: 6 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகுமா? தலைமை செயலகத்தில் சபாநாயகர் கொடுத்த வாக்குறுதி!

இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகர் அவர்களை சமாதானப்படுத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு எழுந்து பதிலளித்தார். “எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி அமைச்சர் பேசுகிறார். திமுக ஆட்சியில் எங்கள் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்கவில்லை. அது குற்றம் அல்ல. அவரவர் எண்ணம் மற்றும் நடைமுறை. எதிர்க்கட்சித் தலைவருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று பேசுவது தேவையற்றது” என்றார்.

தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், “பேரவைத் தலைவர் வரும்போது மட்டுமே உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும். முதலமைச்சர் நேரடியாக தனது இருக்கைக்குச் சென்று வணக்கம் தெரிவிப்பதே மரபு. முதலமைச்சர் வரும்போது எழுந்து நிற்க வேண்டுமென்றால், எதிர்க்கட்சித் தலைவருக்கும் அதே விதி பொருந்துமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு சபாநாயகர் விளக்கம் அளித்தார். “சட்டசபையில் முதலமைச்சர் வருகையின் போது எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து நிற்பது கட்டாயமில்லை. முன்பு முதலமைச்சர் வந்தபோது எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். ஆனால் அது அவரவர் விருப்பம். கட்டாயப்படுத்தப்படவில்லை” என்று தெரிவித்தார். இந்த விவாதம் சட்டசபை நடைமுறைகள் மற்றும் பரஸ்பர மரியாதை குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது. அவை ஒழுங்கு மற்றும் மரபுகள் குறித்து இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய நிகழ்வாக இது அமைந்தது.
 

இதையும் படிங்க: சபாநாயகர் சட்டத்தின் காவலரா..? மதத்தின் பிரதிநிதியா..? நயினார் தாக்கு.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share