எங்கள் மீது அவதூறு பரப்பினால் பழைய வரலாறுகளை தோண்டி எடுப்போம்! தவெக எச்சரிக்கை!
ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்ற மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது என தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வுக் குளறுபடிகளை மட்டுமல்ல, நீட் தேர்வே அறவே கூடாது என்பதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு என்றும், ஓட்டுக்காக நீட்டை நாங்களே நீக்குவோம் என்று மக்களை ஏமாற்றும் மோசடி அரசியலில் தவெக ஒருபோதும் ஈடுபடாது என்றும் அக்கட்சி அதிகாரப்பூர்வமாகத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மற்றவர்களின் உழைப்பிற்கும், போராட்டங்களுக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் 'அவதூறு கழகம்' தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கல்வியை மீண்டும் ஒன்றிய பட்டியலில் இருந்தோ, பொதுப் பட்டியலில் இருந்தோ முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை 'சிறப்புப் பொதுப் பட்டியல்' உருவாக்கி, மாநில அரசுகளுக்குச் சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும். இதன் வாயிலாகவே கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும், இதையே தவெக வெற்றித் தலைவர் அவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றவர் உழைப்புக்கும், மற்றவர் சிந்தனைக்கும், மற்றவர் போராட்டத்திற்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் அரசியல் அறமற்ற வேலையைச் செய்பவர்கள், தவெக மீது சேறு வாரி இறைப்பதை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். இதை மீறியும் தொடர்ந்து அவதூறு பரப்பினால், அந்த அவதூறு கழகத்தின் பழைய அரசியல் மோசடி வரலாறுகளை உலகமே தோண்டி எடுத்து அம்பலப்படுத்தும் சூழல் உருவாகும். அது அவர்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமையும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் மறந்துவிடக் கூடாது.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய பாடகர் தெருக்குறள் அறிவு கைது மற்றும் அரசியல் பூசல்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தவெக வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விஜய் அரசுக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளது! 38-வது ஆண்டு விழாவில் தவெக-வை பாராட்டிய அன்புமணி!