விருகம்பாக்கம், ரிஷிவந்தியம் தொகுதிகள்.. தேமுதிகவுக்கு NO சொன்ன திமுக..!! அப்செட்டில் பிரேமலதா..!!
சென்னை அறிவாலயத்துக்கு இன்று வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த், திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் முதல் முறையாக இணைந்துள்ள தேமுதிகவுக்கு 10 சட்டசபை தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் வெறும் 0.43 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிகவுக்கு இவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பது கூட்டணியில் உள்ள பிற கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "எங்களைவிட அதிக தொகுதிகள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டுள்ளதே" என்று பல கூட்டணிக் கட்சியினர் திமுக மீது தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளை எந்தெந்த இடங்கள் என்பதை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு நேரில் வருகை தந்தார்.
இதையும் படிங்க: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி! திமுக கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
அங்கு திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய 10 தொகுதிகளுக்கான விருப்பப் பட்டியலை அவர் திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு அவர்களிடம் கையளித்தார். ஆனால், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த விருகம்பாக்கம் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய இரு தொகுதிகளை ஒதுக்க திமுக பேச்சுவார்த்தைக் குழு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ரிஷிவந்தியம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் தானே போட்டியிட விரும்பியதாகவும், விருகம்பாக்கம் தொகுதியை தேமுதிக மூத்த தலைவர் பார்த்தசாரதிக்கு ஒதுக்கக் கோரியதாகவும் தெரிகிறது. குறிப்பாக, விருகம்பாக்கம் தொகுதியில் 2011 சட்டசபைத் தேர்தலின்போது பார்த்தசாரதி போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், திமுக தரப்பில் இந்த இரு தொகுதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் பிரேமலதா விஜயகாந்த் ஏமாற்றத்துடன் அண்ணா அறிவாலயத்திலிருந்து வெளியேறினார்.
மீண்டும் இன்று மாலை பேச்சுவார்த்தைக்கு வருவதாகக் கூறிவிட்டு அவர் சோகமாகத் திரும்பிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு, திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலான கட்டத்தை எட்டியிருப்பதை வெளிப்படுத்துகிறது. தேமுதிகவின் விருப்பத் தொகுதிகளில் மாற்றம் செய்யப்பட வேண்டுமா என்பது குறித்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!