சென்னை வாக்காளர்களுக்கு நற்செய்தி! ஏப்ரல் 12 முதல் வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு!
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வரும் 12ம் தேதி முதல் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி தொடங்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 களம் சூடுபிடித்துள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (VIS) வழங்கும் பணி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 12) முதல் தொடங்குகிறது. இந்தப் பணி குறித்துச் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப. அவர்கள் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தின் 16 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு 12.04.2026 முதல் 18.04.2026 வரை வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்படவுள்ளன. அந்தந்தப் பகுதிகளின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாக வாக்காளர்களின் வீடுகளுக்கே வந்து இந்தச் சீட்டுகளை விநியோகம் செய்வார்கள்.சீட்டுகளைப் பெற்றுக்கொண்டதற்கான கையெழுத்து அல்லது விரல் அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளின் மொத்த வாக்காளர் விவரங்கள் பின்வருமாறு: ஆண் வாக்காளர்கள்: 13,95,716, பெண் வாக்காளர்கள்: 14,96,921, இதர வாக்காளர்கள்: 868, மொத்த வாக்காளர்கள்: 28,93,505 இவர்களுக்காக 975 இடங்களில் மொத்தம் 4,085 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜய் பரப்புரைக்கு முட்டுக்கட்டையா? பகிரங்க குற்றச்சாட்டு... சட்டென ரியாக்ட் செய்த சென்னை மாநகராட்சி..!!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்களின் வசதிக்காகத் தகவல் சீட்டின் வடிவமைப்பில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: வாக்காளரின் வரிசை எண் மற்றும் பகுதி எண் ஆகியவை சீட்டின் மேல் வலது மூலையில் பெரிய எழுத்துருவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் காணலாம். மேலும், வாக்குப்பதிவு நாளன்று அலுவலர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை விரைவாகக் கண்டறிய இது உதவியாக இருக்கும்.
யாரேனும் வீட்டில் இல்லாத காரணத்தால் விநியோகிக்கப்படாமல் எஞ்சும் வாக்காளர் தகவல் சீட்டுகள் அனைத்தும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு மூடிய உறையில் பாதுகாப்பாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா என்ற முழக்கத்துடன் நடைபெற்று வரும் இந்தப் பணிகளில், வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: வீடு தேடி வரும் வாக்காளர் தகவல் சீட்டு! ஏப்ரல் 10 முதல் விநியோகம்...தேர்தல் ஆணையம் அதிரடி!