தமிழ்நாட்டில் மதுபான விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் மூலம் அரசே நேரடியாக நடத்தி வரும் நிலையில், அதை தனியார் மயமாக்கும் திட்டம் பற்றிய செய்திகள் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பின்னணியில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்து, தனியார் மயமாக்கினால் கடைகளை மூடி போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிரொலியை உருவாக்கியுள்ளது.
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 4,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் நகர்ப்புறங்களில் உள்ள சுமார் 2,500 கடைகளை முதற்கட்டமாக தனியார் மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை வரும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

சங்கம் சுட்டிக்காட்டிய முக்கிய கவலைகளில் ஒன்று, 23 ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் எதிர்காலம். சுமார் 23,000 ஊழியர்கள் இந்தத் துறையில் பணியில் இருப்பதாக சங்கம் தெரிவித்தது. இவர்களில் பலர் தற்காலிக ஊழியர்களாகவே நீண்ட காலமாக வேலை பார்த்து வருகின்றனர். சம்பள பிடித்தம் போக சுமார் 14,000 ரூபாய் மட்டுமே கிடைப்பதாகவும், பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். தனியார் மயமாக்கல் நடைமுறைக்கு வந்தால் இந்த ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது என்று சங்கம் எச்சரித்தது.
இதையும் படிங்க: Breaking News! செந்தில் பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டில் அதிர்ச்சி... டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
“மதுக்கடைகளை அரசு ஏற்று நடத்தக்கூடாது. எல்லாவற்றையும் மூடுங்கள். டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாற்றுப் பணியை அரசுத் துறையில் வழங்குங்கள்” என்று வலியுறுத்திய சங்கம், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை புறக்கணித்து தனியார் மயமாக்கல் நோக்கி சென்றால் தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று திட்டவட்டமாக அறிவித்தது. தனியார் மயமாக்கப்பட்டால் ஊழியர்கள் குடும்பத்தினரோடு நடுத்தெருவில் நிற்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். மதுவிற்பனையை தனியார் மயமாக்கினால் கடைகளை மூடுவோம் என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கொத்து கொத்தாய் சிக்கிய முக்கிய ஆவணங்கள்... டாஸ்மாக் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு இறுகும் பிடி...!