சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிக விலைக்கு மது விற்ற 277 பணியாளர்களை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. மே 28-ம் தேதி நடத்தப்பட்ட தீவிர சோதனையில் இந்த முறைகேடுகள் பிடிபட்டன.
தமிழக மாநில வாணிபக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை விலையை விட ₹10 முதல் ₹50 வரை மற்றும் அதற்கு மேல் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றச்சாட்டின் அடிப்படையில் 277 பணியாளர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அரசு இந்தப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. முதலில், கூடுதல் விலைக்கு விற்றதால் விதிக்கப்பட்ட அபராதத் தொகை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் வட்டித் தொகையை வங்கியில் செலுத்தி உறுதி செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: ஒத்த பைசா வாங்கல!! 171 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!! வசூல் வேட்டைக்கு வேட்டு வைத்த அரசு!
இரண்டாவதாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட காலத்தில் சம்பளம் கேட்க மாட்டேன் என எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்க வேண்டும். மூன்றாவதாக, அவர்கள் செலுத்திய காப்புத் தொகை அரசிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவதாக, பொது கலந்தாய்வு மூலம் மட்டுமே மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஐந்தாவதாக, இனிமேல் இதுபோன்ற தவறு செய்தால் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி நடைபெறும் விலை மோசடிகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மீதமுள்ள ஊழியர்களும் இனிமேல் கூடுதல் விலை விற்பனையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என அரசு எச்சரித்துள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் விலைப் பட்டியலைப் பொதுமக்கள் பார்வைக்கு தெளிவாக வைக்கவும், சோதனைகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் மது விற்பனையில் ஒழுங்கு முறை கொண்டு வர அரசு தீவிரம் காட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. பாதிக்கப்பட்ட பணியாளர்கள் நிபந்தனைகளை ஏற்று மீண்டும் பணிக்குத் திரும்ப முடியுமா என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: தவெக அமைச்சர்கள் அலுவலகங்களில் பணிபுரிய ஆர்வம்!! ஆயிரக்கணக்கில் குவியும் மனு!