2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்குப் பிறகு, மாவட்ட வாரியாக கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், அதன் அடிப்படையில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கட்சித் தலைமை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதேபோல், மாவட்ட அமைப்புகளை மறுசீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. புதிய மாவட்ட அமைப்புகளை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள மாவட்டங்களின் எல்லைகளை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் திமுக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கடந்த தேர்தலில் திருப்திகரமாக செயல்படாத மாவட்டப் பொறுப்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என கட்சித் தலைமை முன்கூட்டியே எச்சரித்திருந்த நிலையில், அதன் முதல் கட்ட நடவடிக்கையாக ஈரோடு மத்திய மாவட்டப் பொறுப்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING தவெக ஆட்சி அமைத்ததில் இருந்தே... விடிந்ததுமே விஜய் அரசுக்கு இடியை இறக்கிய ஸ்டாலின்...!
மேலும், ஈரோடு மத்திய மாவட்ட அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஈரோடு மத்திய மாவட்டத்தின் கீழ் இருந்த பெருந்துறை சட்டமன்றத் தொகுதி, ஈரோடு தெற்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பவானி சட்டமன்றத் தொகுதி ஈரோடு வடக்கு மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஈரோடு மத்திய மாவட்டத்தின் அமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. முன்பு அந்த மாவட்டத்தின் கீழ் இருந்த இரண்டு சட்டமன்றத் தொகுதிகளும் வெவ்வேறு மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மருத்துவ படிப்பில் தமிழகத்தின் இடங்கள் இழப்பு...; சரண்டர் ஆனது ஏன்..? தவெக அரசை பூந்து விளாசிய ஸ்டாலின்..!!