தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும், த.வெ.க. எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது குறித்து சென்னை உட்பட பல்வேறு இடங்களில் சூதாட்டம் (பெட்டிங்) தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க. மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், ஓட்டுப்பதிவு ஏப்ரல் 23 அன்று முடிந்தது. இப்போது ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சூதாட்டப் போக்கு அதிகரித்துள்ளது.
சென்னையில் மண்ணடி, சவுகார்பேட்டை, திருவள்ளூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் “எந்தக் கட்சி வெற்றி பெறும்? த.வெ.க. எத்தனை இடங்களில் ஜெயிக்கும்? த.வெ.க. தலைவர் விஜய் இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவாரா? த.வெ.க. அ.தி.மு.க. ஓட்டுகளைப் பிரிக்கிறதா அல்லது தி.மு.க. ஓட்டுகளைப் பிரிக்கிறதா?” என்பது போன்ற கேள்விகளுக்கு பணம் பந்தயம் கட்டப்படுகிறது.
இதையும் படிங்க: மின்னணு இயந்திரத்தில் கோளாறு!! ஒருமணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாக்குப்பதிவு! நாமக்கல்லில் பரபரப்பு!

ஒரு சிலர் 10,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை பெட்டிங் தொகையை வசூலித்து வருகின்றனர். கூகுள் பே வழியாக பணம் அனுப்பினால், மே 4ம் தேதி இரவே வெற்றியாளருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஆசை காட்டி பணம் பெறப்படுகிறது. குறிப்பாக 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்களை மொபைல் போன் மூலம் தொடர்புகொண்டு சூதாட்டத்தில் ஈடுபடுத்தும் செயலும் அதிகரித்துள்ளது.
இந்த சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், தேர்தல் முடிவுகளை ஊகித்து பணம் சம்பாதிக்க முயல்கின்றனர். ஆனால் இது சட்டவிரோதமான செயலாகும். காவல் துறையினர் இதனை உன்னிப்பாக கண்காணித்து, சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த காலகட்டத்தில், இத்தகைய சூதாட்டம் தேர்தல் சூழலை பாதிக்கும் வகையில் அமைவதால், காவல் துறை உடனடியாக தலையிட்டு இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடந்த தேர்தலை விட விர்ர்ரென ஏறும் வாக்குப்பதிவு!! 2021-ல் இவ்வளவு தான்! இப்போ எகிறுது சதவீதம்!