தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் கோவையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் சூரிய பிரகாஷை (காங்கிரஸ்) அறிமுகப்படுத்தும் கூட்டம் இன்று துடியலூர் அருகே உள்ள வடமதுரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி, தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு (Booth Agents), தனிப்பட்ட முறையில் ஒரு பவுன் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகம் செய்யப்பட்டார். அவர் பேசுகையில், கூட்டணி கட்சியினர் தீவிரமாக உழைத்து என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அதன் மூலம் மு.க. ஸ்டாலின் அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்க உறுதுணையாக இருப்போம் எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.! 4051 வேட்பாளர்கள் போட்டி..!

காங்கிரஸ் வேட்பாளருக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்கக் கோரிய செந்தில் பாலாஜி, வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும், கோவைக்கு அவர் வரும்போது மிகச்சிறப்பாகப் பணியாற்றிய முகவர்களை அவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK), எஸ்.டி.பி.ஐ (SDPI) உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும், இளைஞர் மற்றும் மகளிர் அணித் தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
சென்னையில் காவல் ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ள சூழலில், கோவையில் தேர்தல் ஆணையம் பணப் புழக்கத்தைக் கண்காணிக்கத் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் இந்த 'தங்க நாணயம்' அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், களப்பணியைத் தீவிரப்படுத்தவும் இதுபோன்ற அறிவிப்புகள் ஆளுங்கட்சித் தரப்பில் வெளியிடப்பட்டு வருகின்றன.
கோவை வடக்கு மாவட்டத் துடியலூர் கிழக்கு பகுதி கழகச் செயலாளர் வரவேற்றுப் பேச, தலைமைச் செயற்குழு உறுப்பினர் டி.பி. சுப்ரமணியன், மூலனூர் கார்த்தி உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். முடிவில் வட்டக் கழகச் செயலாளர் தமிழ்நிதி நன்றி கூறினார்.
இதையும் படிங்க: தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்பாலம்..! பாமக அழுத்தமே காரணம்... சௌமியா அன்புமணி பரப்புரை..!!