எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஆந்திர மாநில அரசு சிறைபிடித்துள்ளதைக் கண்டித்தும், அவற்றை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சென்னை காசிமேடு துறைமுக அனைத்து விசைப்படகுகள் சங்கத்தினர் கூட்டாக முடிவு செய்துள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜிஸ் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள், இச்சம்பவம் குறித்துத் தங்கள் ஆதங்கத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய சங்க நிர்வாகிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பாக வழக்கமான மீன்பிடிப்புக்காகக் கடலுக்குச் சென்ற சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு/காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நமது மீனவர்களின் விசைப்படகுகளை ஆந்திர மாநிலக் காவல்துறையும் கடலோரக் காவல் படையும் அத்துமீறி சிறைபிடித்துள்ளன. படகுகளையும் மீனவர்களையும் மீட்கத் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவொரு சாதகமான தீர்வும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நான் சான்றிதழை காட்டுவேன்! மோடி காட்டத் தயாரா?! அமெரிக்க படிப்பு பணம் எங்கிருந்து வந்தது? அபிஜீத் தீப்கே பதில்!

மேலும், இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் மீன்வளத்துறை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தும் தற்போதைய அரசு எந்தவொரு தீவிர நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆந்திர அரசு தமிழக மீனவர்களின் நியாயமானக் கோரிக்கைகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதால், அம்மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு விற்பனைக்காகக் கொண்டு வரப்படும் கடல் உணவுகள் மற்றும் மீன் வகைகளுக்குத் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இப்பிரச்சனையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேரடியாகத் தலையிட்டு, ஆந்திர மாநில அரசுடன் பேசி சிறைபிடிக்கப்பட்டுள்ள விசைப்படகுகளையும் மீனவர்களையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு விரைந்து நடவடிக்கை எடுக்கத் தவறினால், வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து விசைப்படகு மீனவர்களும் ஒன்றிணைந்து வடசென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திலும், ஒரு நாள் முழு நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்று சென்னை விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: “அரசியலுக்கு வாங்க த்ரிஷா அக்கா” மதுரையில் பரபரப்பு போஸ்டர்! விஜய் அரசியலுக்கு பின் புதிய விவாதம்