"மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு உயர வேண்டும்": செங்கோட்டையனுக்கு முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பதில்!
"தமிழகத்தில் மின் தட்டுப்பாடு தொடர்பாகப் பேசியுள்ள அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எனது நீண்டகால நண்பர், அனுபவம் வாய்ந்தவர் என்பதால் அவர் சொல்வதில் தவறில்லை; எனினும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு 100 மடங்கு வளர்ச்சி அடைந்து மேலே செல்ல வேண்டும் என்பதே நமது தொலைநோக்கு ஆசையாக இருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான சு. முத்துசாமி தெரிவித்துள்ளார்."
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளையொட்டி, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சு. முத்துசாமி பல்வேறு நடப்பு அரசியல் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். அப்போது, "திமுக ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டு, நிலப்பட்டா வழங்குதல், தடையற்ற மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட சாமானிய மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குப் போர்க்கால அடிப்படையில் தீர்வு கண்டனர். மகளிர் உரிமைத் தொகை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் உள்ளிட்டவை அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து பார்த்துச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும். ஆளும் அரசை எப்போது பார்த்தாலும் குறைகூறுவது மட்டுமே எதிர்க்கட்சியின் பிரதான நோக்கமல்ல; மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு ஆக்கப்பூர்வ முன்முயற்சிகளை எடுத்தால் திமுக அதற்கு எப்போதும் தோளோடு தோள் நின்று உறுதுணையாக இருக்கும்" என்றார்.
இதையும் படிங்க: கம்யூனிஸ்டுகள் பிரிந்தாலும் தவெகவுக்கு பின்னடைவு இல்லை: வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!

புதிய தலைமைச் செயலக விவகாரம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், "புதிய தலைமைச் செயலகமானது அடுத்த 200 முதல் 300 ஆண்டுகால எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 250 முதல் 300 ஏக்கர் பரப்பளவில், போக்குவரத்து நெரிசலற்ற இடத்தில் அனைத்து முக்கிய அரசுத் துறை தலைமை அலுவலகங்கள், அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் ஒரே குடையின் கீழ் அமையும் வகையில் திட்டமிடப்பட வேண்டும். அதேபோன்று, பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் மற்றும் கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் ஆகியவை தொழில்முனைவோருக்கும் சர்வதேச அளவில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத திட்டங்களாகும்" என்று சுட்டிக்காட்டினார்.
கூட்டணி மாற்றங்கள் மற்றும் தேர்தல் களம் குறித்துக் கருத்து தெரிவித்த சு. முத்துசாமி, "மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது குறித்து அந்தக் கட்சிகளின் தலைமைகளே உரிய விளக்கம் அளித்துவிட்டன. தேர்தல் கூட்டணிகளில் ஏற்படும் மாற்றங்கள் திமுகவிற்கு எந்த வகையிலும் பலவீனமாக அமையாது. திமுக தொண்டர்கள் எத்தகைய அரசியல் சவால்களையும் துணிவோடு எதிர்கொண்டு களப்பணியாற்றி வெற்றியை ஈட்டித் தருவார்கள். மேலும், புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்; வீண் அரசியல் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு, தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அடித்தட்டு உழைக்கும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்து அரசு உடனடியாகத் தீர்வு காண முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முதல்வர் எல்லோரையும் உற்சாகப்படுத்தவே விரும்புகிறார்.. அமைச்சர்கள் இருக்கையில் அமர்ந்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்!