திமுக அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் நிர்வாகத் தோல்விகளைக் கண்டித்து, அதிமுக சார்பில் நாளை (மார்ச் 17) நடைபெறவிருந்த மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த இன்பதுரை தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து முறையிட்ட பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள 'சுவிதா' (Suvidha) மொபைல் செயலி மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க முயன்றபோது, அந்தச் செயலி சரியாக வேலை செய்யவில்லை என அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ஆன்லைன் மூலம் அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, இன்பதுரை தலைமையிலான குழுவினர் தலைமைத் தேர்தல் அதிகாரியைச் சந்தித்துப் புகார் மனு அளித்தனர்.

சுவிதா செயலி மட்டுமின்றி, அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் நேரடியாக மனு அளித்தும் அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம் என அர்ச்சனா பட்நாயக் உறுதி அளித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "போதை மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாறிய தமிழ்நாடு".. NDA கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்... EPS அறிவிப்பு..!!
ஏற்கனவே காவல்துறையின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் பின்பற்றி நாளை காலை தமிழகம் முழுவதும் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என இன்பதுரை உறுதிப்படத் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே, ஆளுங்கட்சிக்கு எதிராக அதிமுக இத்தகைய பிரம்மாண்ட போராட்டத்தைத் திட்டமிட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!