அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மேற்காசியப் போரை மிக விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக அறிவித்துள்ளார். நிருபர்களிடம் பேசிய அவர், போர் தொடர்பான ஒப்பந்தம் விரைவில் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
“நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரத்துடன் உள்ளனர்” என்று டிரம்ப் கூறினார். மேலும், கச்சா எண்ணெய் விலைகள் விரைவில் படுகுழியில் சரியப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.
“கச்சா எண்ணெய் விலைகள் அதலபாதாளத்திற்குச் சரிவதை நீங்கள் காணப் போகிறீர்கள். அவை நிச்சயம் குறையப் போகின்றன. அங்கு மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது. எனவே, விலைகள் கடுமையாக சரியும்” என்றார்.
இதையும் படிங்க: இது புயலுக்கு முன் இருக்கும் அமைதி!! ஈரான் மீது புதிய தாக்குதல் நடத்த திட்டம்! ட்ரம்ப் சூசகம்!
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து முடிவெடுக்க ஒரு மணி நேரம் மட்டுமே இருந்ததாகவும், அந்த நேரத்தில் அனைவரும் தயாராக இருந்ததாகவும் டிரம்ப் தெரிவித்தார். இருப்பினும், சில நாட்டுத் தலைவர்கள் போரை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததால் தாக்குதலை ஒத்திவைத்ததாக அவர் விளக்கினார்.

“ஈரான் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள நான் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருந்தால் இஸ்ரேலைத் தகர்த்துவிடுவார்கள்” என்று டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
உலக அரங்கில் தற்போது பதற்றம் நிலவும் நிலையில், டிரம்ப்பின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுக்கு வந்தால் உலகப் பொருளாதாரம், குறிப்பாக எண்ணெய் சந்தை பெரும் மாற்றத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி இந்தியா உள்ளிட்ட இறக்குமதி நாடுகளுக்கு நிச்சயம் பெரும் நிம்மதியைத் தரும்.
டிரம்ப் நிர்வாகம் அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் உறுதியுடன் இருப்பதாகவும், அதே நேரத்தில் அமைதி பேச்சுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் இந்தப் பேட்டி தெரிவிக்கிறது. சர்வதேச சமூகம் இப்போது டிரம்ப் அளித்துள்ள கால அவகாசத்திற்குள் ஈரான் என்ன முடிவெடுக்கிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளது.
இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவடைந்து அமைதி நிலவினால், உலகப் பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும் என பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த 14 அம்ச ஒப்பந்தம்!! அமெரிக்கா - ஈரான் விரைவில் கையெழுத்திட வாய்ப்பு!