அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கப்படுவது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் பள்ளித் தலைமை ஆசிரியர்களே தங்களது சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட பல கோடி ரூபாய் நிதியை அரசு இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கும் நிலையில், பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் வசதி போன்ற தொடக்க நிகழ்வுக்கான அடிப்படை ஏற்பாடுகளுக்கான செலவினங்களைத் தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவது ஏற்புடையதல்ல என டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

பல ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் பயன்பெறும் இந்த முக்கியமான திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கான ஏற்பாட்டுச் செலவுகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க மறுப்பதும், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றுவதும் அரசு நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: “சினிமாவில் ஹீரோ... நிஜத்தில் வில்லன்...” - சி.எம்.விஜயை விளாசித் தள்ளிய டிடிவி தினகரன்...!
திட்டத்திற்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ள விரிவாக்க நிகழ்வுகளுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு நிதியின் மூலமாகவே மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்றும் இந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசை அவர் கோரினார்.
இதையும் படிங்க: திருவொற்றியூர் படுகொலை... புதுப்புது காரணம் தேடாதீங்க விஜய்..! TTV தினகரன் காட்டம்..!