தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் முக்கிய திருக்கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் நாள் முதல் இந்த நடைமுறை ஐம்பத்திரண்டு முதுநிலைத் திருக்கோயில்களில் அமலுக்கு வந்துள்ளது. பக்தர்கள் இறைவனை அமைதியான சூழலில் தரிசிக்கவும், கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல், ரீல்ஸ் உருவாக்குதல் போன்ற செயல்கள் அதிகரித்து வந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கேமரா இல்லாத செல்போன்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. கேமரா உள்ள செல்போன்களை கோயிலுக்குள் எடுத்துச் செல்ல முடியாது. அதற்காக கோயில் நுழைவாயில்கள், திருமுற்றம் மற்றும் காலணி பாதுகாப்பு மையங்களுக்கு அருகில் செல்போன் பாதுகாப்புக் கவுண்டர்களும் லாக்கர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் தங்கள் செல்போன்களை ஒப்படைத்து டோக்கன் அல்லது ரசீது பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்த பிறகு அந்த ரசீதைக் காட்டி மீண்டும் பெற்றுக்கொள்ளலாம்.ஒரு செல்போனுக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். இந்த கட்டணம் கோயிலுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டதல்ல.

செல்போன்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொண்டு, முறையாகப் பராமரித்து, பக்தர்களுக்குத் திருப்பி வழங்குவதற்கான ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டவே இந்த குறைந்தபட்சக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.கோயிலுக்கு அருகே வசிப்பவர்கள் தங்கள் செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு வரலாம். வெளியூரிலிருந்து வருபவர்கள் வாகனத்திலோ அல்லது தங்குமிடத்திலோ வைத்துவிட்டு கோயிலுக்குச் செல்லலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். பெரிய கோயில்களில் ஆயிரக்கணக்கான செல்போன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும் வகையில் பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க.! ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்க்கும் சிறப்பு முகாம்..!! உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை..!
ஸ்ரீரங்கம் போன்ற கோயில்களில் மூவாயிரம் பெட்டகங்களில் பதினைந்தாயிரம் செல்போன்கள் வரை வைக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறை ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சி மற்றும் ராமேஸ்வரம் உள்ளிட்ட சில முக்கியக் கோயில்களில் பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது அதை மேலும் பல முதுநிலைத் திருக்கோயில்களுக்கு விரிவுபடுத்தியுள்ளனர். தடையை மீறி செல்போன் கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். புகைப்படம் அல்லது வீடியோ எடுத்தால் காவல் துறையில் புகார் அளிக்கப்படும்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பரபரப்பு... 3 முக்கிய துறைகளுக்கு அமைச்சர்கள் பதில்!