தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனிப்பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திண்டாடி வருகிறார். இதனிடையே வாக்கு எண்ணிக்கையின் போது விஜய்க்கு அளிக்கப்பட்ட கான்வாய் மற்றும் அவரது வீட்டின் முன்பு குவிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நேற்று இரவோடு, இரவாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் தவெக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனிடையே இன்று காலை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு தவெக தொண்டர் ஒருவர் மலர் தூவி கண்ணீர் மல்க அழுது புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து டி.வி.சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “என் பெயர் ஜேபிஆர். நான் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவன். மற்றொருவர் பாஸ்கர். நான் ஏத்தாப்பூரைச் சேர்ந்தவன். முருகப்பெருமான் சாட்சியாக, பல கோவில்களுக்குச் சென்று அவருக்காக வேண்டியிருக்கிறேன். தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்திருக்கிறேன். இயேசுவிடமும், அல்லாஹ்விடமும், பிள்ளையாரிடமும் வேண்டியிருக்கிறேன். ஏனெனில் அவர் எந்த மதத்தினரிடமும் வேறுபாடு காட்டாமல், எல்லா மக்களுக்கும் நல்லது செய்ய நினைக்கும் தலைவர். தமிழ்நாட்டின் தங்க மனிதர் அவர்.
தலைவர் விஜயை எனக்கு ஆரம்பத்திலிருந்தே மிகவும் பிடிக்கும். அவர் நடித்த திரைப்படங்களிலிருந்தே நான் அவருடைய ரசிகன். பின்னர் விஜய் மக்கள் இயக்கத்திலும் இணைந்தேன். அவரை மிகவும் நேசிக்கிறேன்; என் உயிரே அவருக்காகத்தான் என்று சொல்லலாம். அவர் ஒவ்வொரு கட்டமாக முன்னேறி, இந்த நாட்டின் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வந்திருக்கிறார். தற்போதைய சூழ்நிலையைப் பார்த்தால் பல்வேறு தடைகள் இருப்பது போல தெரிகிறது. இருந்தாலும் அவர் கண்டிப்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும்.
இதையும் படிங்க: விஜய்க்காக கோதாவில் இறங்க போகும் கார்ப்பரேட் கம்பெனிகள்..! மாஸ்டர் பிளான்..!
எந்தவொரு குறுக்கீடும் வந்தாலும், எந்த அரசியல் தலைவரின் எதிர்ப்பும் இருந்தாலும், எந்த சூழ்ச்சியும் நடந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து வெற்றி பெற்று தமிழ்நாட்டின் தங்க மகனாகவும் முதலமைச்சராகவும் உயர வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. சூரிய பகவானிடமும், முருகப்பெருமானிடமும், இயேசுவிடமும் எல்லா இறைவனிடமும் நான் வேண்டுவது ஒன்றே ‘விஜய் முதலமைச்சராக வேண்டும்’ என்பதுதான். அது எங்களெல்லாருடைய விருப்பமும் கூட. தவெக தொண்டர்கள் அனைவரும் இதே எண்ணத்தோடு உயிர்ப்புடன் காத்திருக்கிறோம். அவர் அந்த உயர்ந்த நிலையை அடையும் வரை நாங்கள் ஓயமாட்டோம். எத்தனை தடைகள் வந்தாலும் அதை மீறி எழுந்து நிற்போம்.
எங்கள் தலைவர் கூறும் ஒரு வார்த்தைக்காகவே இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம். கண்கலங்கியும் பேசுகிறோம். பிற கட்சியினரும் அவருக்கு ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறோம். ஒரு நல்ல தலைவரை நாம் இழக்கக் கூடாது; அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ‘வெற்றி நிச்சயம்’ என்று அவரே பலமுறை கூறியிருக்கிறார். அதனால் நல்லதே நடக்கும். இப்போது இங்கு காவல்துறை பாதுகாப்பு குறைவாக இருப்பது ஏதோ அரசியல் சூழ்ச்சி நடக்கிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. ஆனால் அவையெல்லாம் உடைந்து, எங்கள் தலைவர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறோம் என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: “பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது”... விஜயிடம் கட் அண்ட் கறாராக சொன்ன ஆளுநர்... ஒரு மணி நேரம் நடந்தது என்ன?