தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி. பதவியை யாருக்கு வழங்கப் போகிறது என்ற கேள்வி, அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த இடத்தை காங்கிரசுக்கு தமிழக வெற்றிக் கழகம் வழங்குமா என்பது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அந்த ஒரே ‘சீட்’க்காக காங்கிரஸ் கட்சிக்குள் கடும் போட்டி உருவாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சண்முகம், தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகி, தற்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ், அந்த பதவியை பெற தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்த கூட்டணியை உருவாக்க முக்கிய பங்கு வகித்தவர் அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவின் சக்கரவர்த்தி என கூறப்படுகிறது. ராகுல் காந்திக்கும், முதல்வர் விஜய்க்கும் நெருக்கமானவராக கருதப்படும் அவருக்காகவே ராஜ்யசபா சீட் கேட்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.
இதையும் படிங்க: குன்னத்தில் திமுக - விசிக மோதல்! ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு! கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு!
இதற்கிடையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, கே.எஸ். அழகிரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் டெல்லி மேலிட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நேரு யுவகேந்திராவின் முன்னாள் அகில இந்திய துணைத்தலைவர் ராஜேந்திரனும், தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என ராகுல் காந்திக்கு நேரடியாக கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே ராஜ்யசபா இடத்திற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதால், இறுதியில் அந்த சீட்டை தமிழக வெற்றிக் கழகமே தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவுக்கு தாவ நேரம் குறித்த விசிக நிர்வாகிகள்! தவெகவில் பேசி பதவி வாங்கி தருவதாக திருமாவளவன் சமாதானம்!