தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சுற்றுவட்டாரத்தில் நடைபெறும் நீர்நிலைச் சீரழிவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயத்தின் ஆதாரமாகத் திகழும் பொன்பத்தி, சிங்கவரம், மேலச்சேரி, துறிஞ்சபூண்டி, மண்ணூர், ஆலம்பூண்டி, சாணிக்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஏரிகளில் வண்டல் மண் மற்றும் கிராவல் மண் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நீர்நிலைகளைச் சீரழித்து மண் சுரண்டலுக்கு அனுமதிப்பதா, மக்களைக் குறித்து அரசுக்கு அக்கறை இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.நீர்நிலைகளைத் தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்த வேண்டிய நடைமுறை, தற்போது அவற்றின் இயற்கையான தரைப்பரப்பையே மாற்றும் அளவுக்குச் சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பது மிகுந்த கவலைக்குரியது என வேல்முருகன் குறிப்பிட்டார். மழைக்காலத்தில் நீரைத் தேக்கி வைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விளைநிலங்களுக்கு உயிர் கொடுக்கும் இந்த நீர்நிலைகள் தங்களது தன்மையை இழந்துவிட்டால், அதனால் பாதிக்கப்படுவது தலைமுறை தலைமுறையாக அந்தப் பகுதியை நம்பி வாழும் விவசாயக் குடும்பங்கள்தான் என்று அவர் எச்சரித்தார்.

நீர்நிலைகளின் இயற்கை அமைப்பு சிதைவது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.விவசாயத் தேவைக்காகவும் ஏரியின் கொள்ளளவை உயர்த்தவும் வழங்கப்பட்ட அனுமதி, கட்டுப்பாடற்ற வணிக நோக்கிலான வளச்சுரண்டலாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட தேவைக்கான அனுமதி தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அதன் பாதிப்பு பல தலைமுறைகளைத் தாக்கும் என்று கூறிய அவர், அனுமதி திசைமாறியது எப்படி, நன்மைக்கான திட்டம் வணிகச் சுரண்டலாக மாறியது எப்படி என கேள்விகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: DETENTION COPY..! வாய்த் திறக்காத பொய் போராளி... தவெக விமர்சனம்.!!
அரசுத் துறைகளின் தொடர் கண்காணிப்பு நடைமுறையில் இருந்தும், விதிமீறல்கள் தடையின்றி நடப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது என வேல்முருகன் கூறினார். பொதுச் சொத்தான நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் நிர்வாகம் காட்டிய அலட்சியமே இதற்கு முதன்மைக் காரணம் என்று அவர் குற்றம் சாட்டினார். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியும், நிர்வாகம் அதனை உடனடியாகக் கவனத்தில் கொள்ளாதது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.செஞ்சி வட்டாரத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நடைபெற்ற மண் அகழ்வுப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என வேல்முருகன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... வெற்றிக் கனி யாருக்கு.? இன்று வெளியாகும் தவெக வேட்பாளர் பட்டியல்..!!