அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த இளைஞர் பிரதீப் ராஜ் மறுநாளே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல்துறை முதலமைச்சரின் முழு கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ள அவர், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் காவல் ஆய்வாளர் ஒருவர் தன்னை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்போவதாகவும் இளைஞர் பிரதீப் ராஜ் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் புகார் தெரிவித்திருந்தார். அதற்கு மறுநாளே அடையாளம் தெரியாத கும்பலால் அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தினகரன் தெரிவித்தார்.

சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு உற்ற நண்பனாகவும், சட்டத்தை மீறுவோருக்கு அச்சத்தை ஏற்படுத்தும் எதிரியாகவும் காவல்துறை இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறையை பாராட்டி பேசிய இரண்டு நாட்கள் கூட முழுமையாக கடக்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை ஆய்வாளர் மிரட்டியதாக புகார் அளித்த நபர் அடுத்த நாளே கொல்லப்பட்டிருப்பது, காவல்துறை முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புவதுடன், பொதுமக்களின் நம்பிக்கையையும் அச்சுறுத்துகிறது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: நெருங்கும் இடைத் தேர்தல்... தவெகவிற்கு எதிராக பொது வேட்பாளர்.! டிடிவி தினகரன் முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நிகழும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்கும் குடும்பப் பிரச்சினை, சொத்து தகராறு, முன்விரோதம், பழிவாங்கும் மனநிலை போன்ற வெவ்வேறு காரணங்களைக் கூறி, அவை சட்டம் ஒழுங்குடன் தொடர்பில்லாதவை என்பது போல் சித்தரிக்கும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இந்த இளைஞர் பிரதீப் ராஜ் படுகொலைக்கு என்ன காரணம் சொல்லப்போகிறார் என தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.தமிழகத்தில் அரங்கேறும் ஒவ்வொரு குற்றச் சம்பவத்திற்குப் பின்னரும் புதிய காரணங்களைத் தேடாமல், குற்றங்கள் நிகழ்வதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் வகையில் காவல்துறையைச் செயல்படச் செய்து, சட்டம் ஒழுங்கைப் பேணிக் காத்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதலமைச்சர் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தவெகவிற்கு எதிராக டிடிவி தினகரன் எடுத்த முக்கிய முடிவு... சி.எம். விஜய்க்கு புது சிக்கல்...!