திமுக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்ததே கிடையாது என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதற்காக தவெகவினரை திமுக உடன்பிறப்புகள் சோசியல் மீடியாவில் வைத்து செய்து வருகின்றனர். ஆனால் அதன் உண்மையான சாராம்சம் என்னவென பார்க்கலாம்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தஞ்சாவூரில் நடந்த அக்கட்சியின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின் மேடையில் பேசிய வார்த்தைகள். அதாவது, தமிழக தேர்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக 2வது முறையாக ஆட்சியை பிடிப்பது கடினம் என்றும் திமுகவுக்கு அப்படி வரலாறே இல்லை என்றும் விஜய் பேசியிருக்கிறார். மேலும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியாலேயே தொடர்ச்சியாக இரண்டாவது முறை தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியவில்லை என விஜய் பேசியிருக்கிறார்.
அதாவது, “அடுத்ததும் நாங்கதான்னும் சிஎம் சார் சொல்வார். அதெல்லாம் நடக்கவே நடக்காது. இரண்டாவது முறை வந்ததெல்லாம் சரித்திரமே கிடையாது. சீனால Great wall of china, அதோட நீளத்தை விட பெரிய டாஸ்க் இது. ஆனாலப்பட்ட அவங்க அப்பாவாலேயே முடில” என பேசியிருந்தார். உடனே வரலாற்று பக்கங்களை திருப்பிய திமுக உடன்பிறப்புகள், 1967 சட்டப்பேரவை தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட திமுக 137 இடங்களை வென்று வரலாறு காணாத திருப்பமாக ஒரு மாநில கட்சி முதன் முறையாக தமிழக அரியணையில் ஏறியது. அதன் பின்னர், 1971ம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் இந்திரா காங்கிரஸ் உடன் கைக்கோர்த்து, அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக களம் கண்டது. அப்போது திமுக 203 தொகுதிகளில் போட்டியிட்டு 184 தொகுதிகளில் வென்றது. இதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கட்சி அதிகமான தொகுதிகளை வென்றதாக உள்ளது.
இதையும் படிங்க: பாட்டிலுக்கு பத்து போதுமா? தமிழ்நாட்டை கொலை கூடாரமாக்கிய டாஸ்மாக் மாடல் அரசு... வானதி சீனிவாசன் தாக்கு..!!
இது உண்மை தான் என்றாலும், மற்றொருபுறம் ஆராய்ந்து பார்த்தால் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் இரண்டு முறை ஆட்சி அமைக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை. 1971க்குப் பிறகு நடந்த 1977, 1980, 1984 என மூன்று முறையும் ஹாட்ரிக் வெற்றி கண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் அதிமுக ஆட்சி அமைத்தது. 1989, 1996, 2006 ஆண்டுகளில் திமுகவும், 1991 மற்றும் 2001இல் அதிமுகவும் அடுத்தடுத்து வெற்றி பெற்றன. 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையில் தேர்தலைச் சந்தித்த அதிமுக அடுத்தடுத்து 2 முறை வென்று அரியணை ஏறியது. அதிமுகவை பொறுத்தவரை எம்.ஜி.ஆர். தலைமையில் அடுத்தடுத்து 3 முறையும், ஜெயலலிதா தலைமையில் அடுத்தடுத்து 2 முறையும் வென்றுள்ளது.
அதுவே திமுகவில் 1967, 1971 என அடுத்தடுத்து 2 முறை திமுக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. ஆனால் 1967ம் ஆண்டு அண்ணா தலைமையில் தான் திமுக தேர்தலை எதிர்கொண்டு வென்றது. அடுத்த 2 ஆண்டுகளிலேயே அண்ணா மறைந்துவிட, மு.கருணாநிதி முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்தே, 1971ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுக வென்றது. அந்த தேர்தல் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. அந்த வகையில் பார்த்தால் கருணாநிதி ஒரு தேர்தலில் மட்டுமே தலைமை வகித்து வெற்றி பெற்றுள்ளார்.
அப்படியானால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், கடைசி வரை தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அரியணையில் ஏற முடியவில்லை. அவரது மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் 2021இல் திமுகவை அரியணையில் ஏற்றினார். 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சியைப் பிடித்து திமுக 2.O அமையும் என சபதமேற்றுள்ளார் ஸ்டாலின். நடக்கவுள்ள தேர்தலில் திமுக தனது இலக்கான 200 தொகுதிகளில் வென்று தமிழக அரியாணையில் ஏறுமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: திமுக தேர்தலில் வீழ்வது உறுதி.. குற்றவாளிகளின் புகலிடம் தமிழ்நாடு... டிடிவி விமர்சனம்..!!