தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (FIR) தற்போது வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், உதயநிதி பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகவும், ஆபாசமான கருத்துகளை பொதுவெளியில் தெரிவித்ததாகவும், சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
FIR-இன் படி, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் கீழ் பிரிவு 196 (சமூகப் பிரிவினையைத் தூண்டுதல்), 192 (கலவரத்தைத் தூண்டும் செயல்), 352 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 79 (பெண்ணின் மாண்பை இழிவுபடுத்துதல்), 296(b) (பொதுவெளியில் ஆபாசமாக பேசுதல்), 61 (சட்டவிரோத செயலுக்கான கூட்டுச் சதி), 351(2) (குற்றவியல் மிரட்டல்) உள்ளிட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனுடன் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: உதயநிதி கைது விவகாரம்... 'சட்டமன்றத்தில் பங்கேற்க விடாமல் செய்த கோழைத்தனம்' - கனிமொழி கடும் கண்டனம்!

காவல்துறைக்கு இந்த விவகாரம் குறித்து நேற்று மாலை தகவல் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட தஞ்சாவூர் போலீசார் இன்று காலை சென்னை சென்றனர். நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் இல்லத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சென்னை காவல்துறையின் பாதுகாப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு, காலை சுமார் 11 மணியளவில் அவரை கைது செய்தனர்.
உதயநிதி மீது பதிவு செய்யப்பட்டுள்ள FIR தற்போது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் மீது அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!