தமிழக அரசியலில் முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், முக்கிய அரசுக் கூட்டமொன்றை உதயநிதி புறக்கணித்தது அந்த மோதலை மேலும் வெளிப்படுத்தியுள்ளது. தகவல் ஆணையர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழு கூட்டத்திற்கு அவர் வர இயலாது என அரசுக்கு முன்கூட்டியே தகவல் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் மாநிலத் தகவல் ஆணையர்கள் நியமனத்திற்கான தேர்வுக்குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இதன்படி நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் இதில் பங்கேற்றார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை.
மூன்று பேர் மட்டுமே அங்கத்தினர்களாக உள்ள இந்தக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் நேரில் வந்து கருத்துகளை முன்வைக்க வாய்ப்பிருந்தபோதும், அதை அவர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்தான் முன்கூட்டியே பங்கேற்க முடியாது எனத் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கூட்டங்களைப் புறக்கணிப்பது திமுகவின் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குப் புதியதல்ல.
இதையும் படிங்க: அடடே.. இந்த Dress code-அ நோட் பண்ணீங்களா..!! கவனம் ஈர்க்கும் திரிஷா, எஸ்ஏசி, ஷோபா வீடியோ!!
முந்தைய அதிமுக ஆட்சியில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க. ஸ்டாலினும் அழைப்பு விடுக்கப்பட்டும் கூட்டங்களில் பங்கேற்காத சம்பவங்கள் நடந்துள்ளன. தந்தையின் பாணியைத் தொடர்வதாக உதயநிதி செயல்படுவதாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன. இருப்பினும் நேற்றைய கூட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் சபாநாயகர் ஆகிய இருவர் மட்டுமே பங்கேற்று, ஒரு மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் (எஸ்சிஐசி) மற்றும் நான்கு மாநிலத் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்தனர்.

அவர்களின் பெயர்கள் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்தபின் அவர்கள் பதவியேற்பார்கள். தமிழகத் தகவல் ஆணையத்தில் ஒரு தலைமை ஆணையர் உள்ளிட்ட ஒன்பது பேர் இடம் உள்ளது. தலைமை ஆணையர் முகமது ஷகீல் அக்தர் மற்றும் ஆணையர்கள் பி. தாமரைக்கண்ணன், ஆர். பிரியாகுமார், கே. திருமலைமுத்து ஆகியோர் ஓய்வு பெற்றதால் ஐந்து இடங்கள் காலியாயின.
இதற்காக ஜூலை 8ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ். ராமநாதன் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிந்துரைகள் அரசுக்கு அளிக்கப்பட்டன. அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் நேற்று நியமனங்கள் இறுதி செய்யப்பட்டன. இந்தப் புறக்கணிப்பு, இரு தரப்புக்கும் இடையிலான உறவு மேலும் மோசமடைய வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் முக்கியமான பதவிகள் நிரப்பப்படும் இந்தச் செயல்பாட்டில் எதிர்க்கட்சியின் பங்கேற்பு இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காவலர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம்..! முதலமைச்சரின் காவல் விருதுகள் அறிவிப்பு..! சுதந்திர தின கொண்டாட்டத்தில் கவுரவிப்பு..!