ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கிய தாக்குதல் 40 நாட்கள் நீடித்தது. இந்தப் போர் கடந்த 8ஆம் தேதி 2 வார காலத்திற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால் பதற்றம் சற்று தணிந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது. இதைத் தொடர்ந்து, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையில் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியன், மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி உள்ளிட்ட உயர்மட்டக் குழு பாகிஸ்தான் சென்றது. பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான பிரதிநிதிகளும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
அமெரிக்கா சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரும் பாகிஸ்தான் வந்தனர். இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஓட்டலில் நடைபெற்ற இந்த முதல் சந்திப்பு சுமார் 21 மணி நேரம் நீடித்தது. ஆனால், எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக வான்ஸ் அறிவித்து தனது குழுவினருடன் ஞாயிற்றுக்கிழமை காலை நாடு திரும்பினார்.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப்பேச்சு!! பாக்., மத்தியஸ்தம்!! இஸ்லாமாபாத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு!

இருப்பினும், இந்த வாரம் அல்லது அடுத்த வார தொடக்கத்தில் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடைபெறக்கூடும் என்று பாகிஸ்தானிலுள்ள ஈரான் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார். பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் அதிகாரி ஒருவரும் கூறியுள்ளார்.
தற்போது அமெரிக்கா, ஈரானிய கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நுழைய விடாமல் தடுப்பு வேலிகளை அமைத்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில் அமைதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க வாய்ப்பு உருவாகியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் தீர்வுக்கு வருமா என்பது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: வீராப்பு பேசிய பாக்., ராணுவ அமைச்சர்! இஸ்ரேல் மிரட்டலுக்கு பயந்து பதிவை நீக்கி கப்சிப்!