மேற்காசிய பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக மீண்டும் கடற்படைத் தடையை அமல்படுத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையுடன் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி முழுவதும் அமெரிக்க ராணுவத்தின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் கடல் வர்த்தகத்தில் புதிய அச்சம் உருவாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த இந்த கடற்படைத் தடையின்படி, ஈரானிய துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து புறப்படும் கப்பல்கள் அமெரிக்க கடற்படையால் தடுக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனினும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பிற நாடுகளின் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களின் சுதந்திரப் பயணத்தை நேரடியாக தடுக்க மாட்டோம் என அமெரிக்க மத்திய ராணுவ கட்டுப்பாட்டு மையம் (CENTCOM) தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ராணுவ விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கப் படைகள் எந்நேரமும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!

இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் இருந்த தற்காலிக அமைதி புரிந்துணர்வு முற்றிலுமாக சிதைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரீபாபாடி, “கடல் முற்றுகை நடவடிக்கை மூலம் அமெரிக்கா ஒப்பந்தத்தை தரைமட்டமாக்கி விட்டது” என்று தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி தங்களுக்கு “சிவப்பு கோடு” எனவும், அதை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் ஈரான் எச்சரித்துள்ளது.
இதனிடையே, பேச்சுவார்த்தை முன்னேற்றம் இல்லையெனில் ஈரானின் மின் நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக இருப்பதால், இப்பகுதியில் அதிகரிக்கும் பதற்றம் உலக பொருளாதாரத்திலும் எரிபொருள் சந்தையிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரான் மீது இந்தியா அதிரடி நடவடிக்கை.. துணை தூதருக்கு சம்மன் அனுப்பிய மத்திய அரசு..!!