கடலூர் மாவட்டம் வடலூர் அருள்மிகு வள்ளலார் சத்திய ஞான சபைக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்கப் பெருவெளி நிலப்பரப்பு, அதன் தொன்மை மாறாமல் பெருவெளியாகவே முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், அங்கு மாற்றுத் திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் அமைப்பதற்கான விரிவான கருத்துரு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் பெருவெளியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பெருவெளி விவகாரத்தில் துறையின் புதிய நிலைப்பாடு மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்களை முன்வைத்தார்.

அரசுத் தரப்பு வாதத்தில், உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளைத் தொடர்ந்து வடலூர் பெருவெளியில் எந்தவித புதிய கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை; பெருவெளியின் புனிதத் தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அது பெருவெளியாகவே தொடர்ந்து பராமரிக்கப்படும்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கூடுதல் விலை விவகாரம்! காவல் துறை வழக்கு பதிய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மேலும், பெருவெளியைச் சுற்றி சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் முறையான பாதுகாப்புச் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், அப்பகுதியில் தர்மசாலை, மருத்துவ சாலை உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுச் சாலைகளை அமைப்பது தொடர்பான மாற்றுத் திட்ட வரைவு அரசின் கொள்கை முடிவிற்காகவும் ஒப்புதலுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; தமிழ்நாடு அரசின் முறையான ஒப்புதல் கிடைத்தவுடன் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முறைப்படி தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஏற்கனவே பெருவெளியைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாகக் காவல் துறையில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அறநிலையத்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாற்றுத் திட்டம் மற்றும் ரூ.20 கோடியிலான சுற்றுச்சுவர் திட்டத்திற்குத் தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்றுத் தாக்கல் செய்ய அரசுத் தரப்பிற்கு வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் இனி கட்டாயம் ரசீது வழங்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!